குஜராத்தில் கரோனா வைரஸ் தொற்று அதிகரிக்கத் தொடங்கியுள்ளதால், பள்ளிகள் திறக்கும் தேதியை அந்த மாநில அரசு ஒத்திவைத்துள்ளது.
நவம்பர் 23 முதல் குஜராத்தில் பள்ளிகள், கல்லூரிகள் திறக்கப்படும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தீபாவளிப் பண்டிகைக்குப் பிறகு தொற்று அதிகரிக்கத் தொடங்கியுள்ளதால் பள்ளிகள் திறப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
குஜராத் மாநிலத்தின் வர்த்தக நகரமாக ஆமதாபாத்தில் கரோனா பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. அதனைக் கட்டுப்படுத்தும் வகையில் ஆமதாபாத்தில் வார இறுதி முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
நவம்பர் 23-ஆம் தேதி பள்ளி, கல்லூரிகள் திறப்பது குறித்து கடந்த 11-ஆம் தேதி பள்ளிக் கல்வித்துறை மற்றும் சுகாதாரத்துறையுடன் அரசு சார்பில் ஆலோசனை நடத்தப்பட்டது. இதில் கரோனா வழிகாட்டுதல் நெறிமுறைகளைக் கடைப்பிடித்து பள்ளிகளில் பாடம் நடத்தலாம் என்று முடிவு செய்யப்பட்டது.
முதற்கட்டமாக பல்கலைக் கழகங்கள், முதுநிலை, இளநிலை இறுதியாண்டு கல்லூரி மாணவர்களுக்கு கல்வி நிலையங்களை திறப்பது என்று முடிவு செய்யப்பட்டது. எனினும் கரோனா பரவலால் தற்போது அவை நிறுத்திவைக்கப்பட்டுள்ளன.