புது தில்லி: இந்தியாவுக்கான ஹங்கேரி, மாலத்தீவு, சாத், தஜிகிஸ்தான் நாட்டு தூதர்கள் குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்திடம், காணொலிக் காட்சி மூலம் தங்களின் நியமனத்திற்கான ஆதாரச் சான்றிதழ்களை சமர்ப்பித்தனர்.
இந்தியாவுக்கு நியமிக்கப்படும் வெளிநாட்டுத் தூதர்கள், குடியரசுத் தலைவரை, குடியரசுத் தலைவர் மாளிகையில் சந்தித்து, தங்கள் நியமனம் தொடர்பான ஆதாரச் சான்றுகளை வழங்குவது வழக்கம்.
இதையும் படிக்கலாமே.. தந்தையை பரிதவிக்கவிட்ட மகன்கள்: ரூ.1 கோடி சொத்துகளை ரத்து செய்த கோட்டாட்சியா்
கரோனா சூழல் காரணமாக தற்போது காணொலிக் காட்சி மூலம், ஆதார சான்றுகளை வெளிநாட்டு தூதர்கள் சமர்பித்து வருகின்றனர். அதன்படி ஹங்கேரி தூதர் ஆண்ட்ரஸ் லஸ்லோ கிரேலி, மாலத்தீவு அதிபர் டாக்டர். உசேன் நியாஸ், சாத் தூதர் சவுங்கி அகமது, தஜிகிஸ்தான் தூதர் லுக்மன் ஆகியோர் காணொலிக் காட்சி மூலம் தங்களின் நியமன ஆதார சான்றுகளை சமர்ப்பித்தனர்.
இவற்றை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஏற்றுக் கொண்டு வாழ்த்துத் தெரிவித்தார். இந்த 4 நாடுகளுடனும், இந்தியாவின் உறவு வலுவாக உள்ளதாக தெரிவித்த ராம்நாத் கோவிந்த், ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் 2021-22ம் ஆண்டில், இந்தியா நிரந்தரமற்ற உறுப்பினராக இடம் பெறுவதற்கு ஆதரவு தெரிவித்ததற்காக, 4 நாட்டு அரசுகளுக்கும் நன்றி தெரிவித்தார்.