தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள சுருளி அருவியில் வடகிழக்கு பருவமழை குறைந்த போதும் நான்காவது நாளாக, சனிக்கிழமையும் அதிக நீர்வரத்து ஏற்பட்டது.
தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ளது புகழ்பெற்ற சுற்றுலாத்தலமான சுருளி அருவி. வடகிழக்கு பருவமழை காரணமாக சுருளி அருவியில் கடந்த நவ.18 முதல் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது.
தற்போது வடகிழக்கு பருவமழை குறைந்த நிலையிலும் சனிக்கிழமை நான்காவது நாளாக சுருளி அருவியில் அதிக நீர்வரத்து ஏற்பட்டது. பொது முடக்கம் காரணமாக சுருளி அருவியில் பக்தர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளுக்குக் குளிக்கத் தடை இருப்பதால் வனத்துறையினர் கண்காணிப்பு செய்து வருகின்றனர்.
இதுபற்றி வனத்துறை ஊழியர் ஒருவர் கூறும்போது வடகிழக்கு பருவமழை குறைந்தாலும், அருவிக்கு நீர்வரத்து தரும் வெண்ணியாறு மற்றும் தூவானம் பகுதிகளில் உள்ள நீர் ஊற்றுகள் மூலம் அருவிக்குத் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
மேலும் அருவியின் மேல் புறமுள்ள ஈத்தைப்பாறை, அரிசி பாறை நீர் ஓடைகள் மூலமும் ஊற்றுத் தண்ணீர் வந்துகொண்டிருக்கிறது. இதனால் சுருளி அருவியில் அதிக அளவு நீர்வரத்து ஏற்பட்டு வருகிறது என்றார்.