கரோனா பரவல் காரணமாக உத்தரப்பிரதேச மாநிலம் நொய்டாவில் பொது நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளும் நபர்களின் எண்ணிக்கையை மாவட்ட அரசு குறைத்துள்ளது. அதன்படி பொதுநிகழ்ச்சிகளில் 100 நபர்களுக்கு மேல் கூடுவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
தலைநகரான தில்லி, ஹரியாணா ஆகிய அண்டை மாநிலங்களில் கரோனா பரவல் அதிகரித்து வருகிறது. தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் பொதுநிகழ்ச்சிகளில் 50 நபர்கள் மட்டுமே அனுமதி வழங்கப்படுவதாக அறிவித்தார்.
இந்நிலையில் கரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கை குறித்து பேசிய நொய்டா மாவட்ட ஆட்சியர் சுஹாஸ், ''வெளியிடங்கள் அல்லது வீடுகளில் நடக்கும் திருமணம் உள்ளிட்ட எந்தவொரு நிகழ்ச்சியிலும் நூறு நபர்களுக்கு மேல் கூடுவதற்கு தடை விதிக்கப்படுகிறது.
கரோனாவைக் கட்டுப்படுத்தும் அரசின் நடவடிக்கைக்கு மக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். அரசின் உத்தரவை மீறி நடப்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்'' என்று கூறினார்.
தில்லி - உத்தரப்பிரதேச எல்லைப் பகுதியான நொய்டாவில் ஏற்கனவே கரோனா பரிசோதனை முகாம்கள் அமைக்கப்பட்டு கரோனா தடுப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.