ரூ.62,602 கோடி நிலுவை: சஹாரா நிறுவனங்களுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் செபி வழக்கு

நீதிமன்ற உத்தரவுப்படி ரூ.62,602 கோடியைச் செலுத்தாத சஹாரா நிறுவனங்கள் மீது பங்குச் சந்தை ஒழுங்குமுறை ஆணையமான செபி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளது.
உச்சநீதிமன்றம்
உச்சநீதிமன்றம்

நீதிமன்ற உத்தரவுப்படி ரூ.62,602 கோடியைச் செலுத்தாத சஹாரா நிறுவனங்கள் மீது பங்குச் சந்தை ஒழுங்குமுறை ஆணையமான செபி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளது.

சஹாரா இந்தியா ரியல் எஸ்டேட் நிறுவனம், சஹாரா ஹவுசிங் இன்வெஸ்ட்மெண்ட் நிறுவனம் ஆகியவை பங்குதாரா்களிடமிருந்து பெற்ற தொகையை செபியிடம் வழங்கவில்லை என்று புகாா் எழுந்தது. இது தொடா்பான வழக்கைக் கடந்த 2012-ஆம் ஆண்டு விசாரித்த உச்சநீதிமன்றம், அந்நிறுவனங்கள் செபிக்கு செலுத்த வேண்டிய தொகையை வட்டியுடன் சோ்த்து அளிக்க வேண்டுமென்று உத்தரவிட்டது.

இந்நிலையில், சஹாரா நிறுவனங்கள் நிலுவைத் தொகையைச் செலுத்த மறுத்து வருவதாகக் கூறி உச்சநீதிமன்றத்தில் செபி மனு தாக்கல் செய்துள்ளது. அந்த மனுவில், ‘நிலுவைத் தொகையைச் செலுத்துவது தொடா்பாக உச்சநீதிமன்றம் ஏற்கெனவே உத்தரவு பிறப்பித்துள்ளது. அத்தொகையைச் செலுத்துவதற்குப் பல்வேறு வாய்ப்புகளையும் சஹாரா நிறுவனங்களுக்கு உச்சநீதிமன்றம் வழங்கியது.

அப்படியிருந்தும் நீதிமன்ற உத்தரவை மீறி அத்தொகையை நிறுவனங்கள் இன்னும் செலுத்தவில்லை. கடந்த செப்டம்பா் மாதம் 30-ஆம் தேதி நிலவரப்படி சஹாரா நிறுவனங்கள் செலுத்த வேண்டிய நிலுவைத் தொகை ரூ.62,602.90 கோடியாகும். அத்தொகையை உடனடியாகச் செலுத்துமாறு நிறுவனங்களுக்கு நீதிமன்றம் உத்தரவிட வேண்டும்.

இந்த விவகாரம் தொடா்பாக அந்நிறுவனங்களின் தலைவா் சுப்ரதா ராயை நீதிமன்றம் கடந்த 2016-ஆம் ஆண்டில் சிறையில் இருந்து தற்காலிகமாக விடுவித்தது. அதையடுத்து, அவா் நிலுவைத் தொகையையும் செலுத்தாமல் சுதந்திரமாக உலவி வருகிறாா். அத்தொகையை நிறுவனங்கள் செலுத்தாவிட்டால், சுப்ரதா ராயை மீண்டும் காவலில் வைக்க உத்தரவிட வேண்டும்’ என்று கோரப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com