ராஜஸ்தானில் மேலும் 14 பசுக்கள் மர்மமான முறையில் இறந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் சுரு மாவட்டதில் உள்ள பில்யுபாஸ் கிராமத்தில் அரசு உதவி பெறும் கால்நடை பண்ணை ஒன்று உள்ளது. தனியார் பராமரித்து வரும் இந்த பண்ணையில் ஏராளமான பசுக்கள் உள்ளன. இங்கு நேற்று மர்மமான முறையில் 80 பசுக்கள் அடுத்தடுத்து இறந்தன. மேலும் சில பசுக்களுக்கு உடல்நலக்குறைவும் ஏற்பட்டது. உடனே பாதிக்கப்பட்ட பசுக்களுக்கு சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டது.
இதுகுறித்து கிராம மக்கள் அளித்த புகாரின்பேரில் நேரில் வந்து பார்வையிட்ட வட்டாட்சியர், பசுக்கள் மர்மமான முறையில் இறந்தது தொடர்பாக உரிய விசாரணை நடத்தப்படும் என்று தெரிவித்தார். நோய் மூலம் பசுக்கள் இறந்தனவா? அல்லது உணவுப் பிரச்னை காரணமா என்ற கோணத்தில் விசாரணை மேற்கொள்ளப்படும் என்றும் பசுக்களுக்கு வைக்கப்பட்ட உணவு மாதிரிகள் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளன என்றும் அவர் கூறினார்.
இந்த நிலையில் பாதிக்கப்பட்ட பசுக்களில் மேலும் 14 பசுக்கள் இன்று இறந்தன. இதையடுத்து ராஜஸ்தானில் மர்மமான முறையில் இறந்த பசுக்களின் எண்ணிக்கை 94ஆக உயர்ந்துள்ளது.