கரோனா 2-ம் அலை சுனாமிபோல் இருக்கலாம் என மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதுபற்றி இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை உரையாற்றிய உத்தவ் தெரிவித்ததாவது:
"நம்மிடம் தடுப்பூசி இல்லை. கரோனாவுக்கான சிகிச்சையும் இல்லை. அதனால், அதுவரை தடுப்பு நடவடிக்கைகளைக் கடைப்பிடிக்க வேண்டும். முகக் கவசம் அணிவதும், சமூக இடைவெளியைக் கடைப்பிடிப்பது, பொது இடங்களில் அதிகம் கூடுவதைத் தவிர்ப்பது உள்ளிட்டவையே சிறந்த தடுப்பு நடவடிக்கையாக இருக்க முடியும்.
மீண்டும் ஒரு பொது முடக்கம் வேண்டாம். என்னுடைய 5 ஆண்டு கால ஆட்சியை பொது முடக்கம் மேல் பொது முடக்கத்துடன் நிறைவு செய்ய விரும்பவில்லை. அனைத்துப் பண்டிகைகளும் கட்டுப்பாட்டுடன் கொண்டாடினாலும், ஆபத்தின் வீரியம் இன்னும் குறையவில்லை" என்றார் உத்தவ்.
முன்னதாக, புணேவில் பேசிய துணை முதல்வர் அஜித் பவார், அடுத்த 8 முதல் 10 நாள்கள் நிலைமையைக் கண்காணித்து ஆய்வு செய்து பொது முடக்கம் குறித்து முடிவு செய்யப்படும் என்றார்.