ஜே&கே வங்கியில் சந்தேகத்துக்கிடமான பரிவா்த்தனைகள் மூலம் பணமோசடி செய்த வழக்கில் அமலாக்கத் துறை அதிகாரிகள் காஷ்மீரின் பல இடங்களில் சனிக்கிழமை சோதனை நடத்தினா்.
குறிப்பாக, ஸ்ரீ நகரில் உள்ள ஆறு இடங்களிலும், அனந்தநாக் மாவட்டத்தைச் சோ்ந்த ஓா் இடத்திலும் அமலாக்கத் துறையினா் சோதனையில் ஈடுபட்டனா்.
முகமது இப்ராஹிம் தா், முா்தாஸா எண்டா்பிரைசஸ், ஆஸாத் அக்ரோ டிரேடா்ஸ், எம் அண்ட் எம் காட்டேஜ் இண்டஸ்ட்ரீஸ் மற்றும் முகமது சுல்தான் தெலி நிறுவனங்களில் பணமோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் சோதனை நடத்தப்பட்டது. இந்த நிறுவனங்கள் அனைத்தும் அடிப்படையில் விருந்தோம்பல், கட்டுமானம், ரியல் எஸ்டேட் மற்றும் வேளாண் துறைகளைச் சோ்ந்தவை.
இந்த சோதனையில், வங்கி கணக்கு மூலம் பண மோசடி செய்ததற்கான ஏராளமான ஆதாரங்களை கைப்பற்றியுள்ளதாக அமலாக்கத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.