திரிணமூல் காங்கிரஸில் கட்சித் தலைமைக்கு எதிராக அமைச்சர் போர்க்குரல்: பிரசாந்த் கிஷோர் தலையீட்டால் அதிருப்தி

பிரசாந்த் கிஷோரின் தேர்தல் ஆலோசனை நிறுவனமான "ஐ- பேக்' தலையீட்டால் அதிருப்தி அடைந்துள்ள சில மேற்கு வங்க அமைச்சர்களும் எம்எல்ஏக்களும் போர்க்குரல் எழுப்பியதால், ஆளு


கொல்கத்தா: பிரசாந்த் கிஷோரின் தேர்தல் ஆலோசனை நிறுவனமான "ஐ- பேக்' தலையீட்டால் அதிருப்தி அடைந்துள்ள சில மேற்கு வங்க அமைச்சர்களும் எம்எல்ஏக்களும் போர்க்குரல் எழுப்பியதால், ஆளும் திரிணமூல் காங்கிரஸ் கட்சிக்குள் கலகம் ஏற்பட்டுள்ளது.

குறிப்பாக கட்சியின் இரண்டாம் நிலைத் தலைவரான சுவேந்து அதிகாரி தலைமையில் கட்சி பிளவுபடும் சூழல் காணப்படுகிறது.

வரும் 2021- ஆம் ஆண்டு ஏப்ரல்-  மே மாதங்களில் மேற்கு வங்கத்தில் நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலை ஒட்டி, மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து கட்சி நிர்வாகிகளுடன், மாநில முதல்வரும், திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான மம்தா பானர்ஜி தீவிர ஆலோசனை நடத்தி வருகிறார். அவருக்கு தேர்தல் கணிப்பு வல்லுநர் பிரசாந்த் கிஷோரின்  "ஐ- பேக்' அமைப்பு ஆலோசனை வழங்குகிறது. ஆனால்,  "ஐ- பேக்' அமைப்பின் செயல்பாடுகள் அவரது கட்சிக்குள் பூகம்பத்தை ஏற்படுத்தி உள்ளன.

திரிணமூல் காங்கிரஸில் மம்தா பானர்ஜிக்கு அடுத்த நிலையில் உள்ளவரும் போக்குவரத்துத் துறை அமைச்சருமான சுவேந்து அதிகாரி தலைமைக்கு எதிராக பகிரங்கமாகவே குற்றச்சாட்டுகளை எழுப்பி வருகிறார். இவர் கடந்த மூன்று மாதங்களாக கட்சித் தலைமையுடன் தொடர்பில் இல்லை. 

முந்தைய மார்க்சிஸ்ட் அரசு நந்திகிராமில் டாடா தொழிற்சாலைக்கு நிலத்தைக் கையகப்படுத்தியபோது அதற்கு எதிரான இயக்கத்தில் முக்கிய பங்கு வகித்தவர் சுவேந்து அதிகாரி. இவருக்கு, கிழக்கு மிதினபுரி, மேற்கு மிதினபுரி, ஜர்க்ராம், புருலியா மாவட்டங்கள், ஜங்கிள்மகால் பகுதிகளில் உள்ள 45 தொகுதிகளில் செல்வாக்கு உள்ளது. 18 மாவட்டங்களில் உள்ள கட்சி நிர்வாகிகளிடம் செல்வாக்கானவராக அதிகாரி உள்ளார். 

கட்சியின் உயர்மட்டக் குழுக் கூட்டங்களில் கலந்து கொள்வதையும், அமைச்சரவைக் கூட்டங்களையும் தொடர்ந்து தவிர்த்து வரும் அமைச்சர் சுவேந்து அதிகாரியை சமாதானப்படுத்தும் முயற்சியில் கட்சியின் எம்.பி. மூத்த தலைவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். 

எனினும், திரிணமூல் காங்கிரஸின் மூத்த அமைச்சர் ஒருவர் கூறுகையில், அமைச்சர் சுவேந்து அதிகாரி தொடர்ந்து திரிணமூல் காங்கிரஸில்தான் நீடிக்கிறார் என்றும், ஊடகங்கள் கூறுவதைப்போல கட்சிக்கு எந்த நெருக்கடியும் இல்லை என்றார். 

இதனிடையே பெயர் கூற விரும்பாத திரிணமூல் காங்கிரஸின் மூத்த தலைவர் ஒருவர் கூறியதாவது:
அமைச்சர் சுவேந்து அதிகாரியை கட்சியிலேயே தக்க வைத்துக் கொண்டால் மட்டுமே, வரும் 2021- ஆம் ஆண்டில் மீண்டும் திரிணமூல் காங்கிரஸ், ஆட்சியைத் தக்கவைத்துக் கொள்ள முடியும். அவரை கட்சியை விட்டு வெளியேற்றினால், அதன் தாக்கம் சட்டப்பேரவைத் தேர்தலில் திரிணமூல் காங்கிரஸை மோசமாக பாதிக்கும். அவர் கட்சியில் இருந்து வெளியேற்றப்படும் பட்சத்தில், அதிருப்தியில் உள்ள மேலும் பல தலைவர்கள் அவருடன் வெளியேறும் வாய்ப்புள்ளது.

திரிணமூல் காங்கிரஸ் கட்சியில் தனக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை என்று சுவேந்து அதிகாரி கருதுகிறார். கட்சித் தலைமை, பிரசாந்த் கிஷோரின் ஐ- பேக் நிறுவனத்துடன் இணைந்து செயல்படுவதில் அவர் அதிருப்தி அடைந்துள்ளார் என்றார்.   

சுவேந்து அதிகாரி மட்டுமின்றி பல எம்எல்ஏக்களும் தலைவர்களும் கட்சித் தலைமைக்கு எதிராக வெளிப்படையாகக் கருத்துத் தெரிவித்து வருகின்றனர். 

எம்எல்ஏக்கள் ரவீந்திரநாத் பட்டாச்சார்யா (சிங்கூர்), நிலம் கையகப்படுத்தல் எதிர்ப்பு இயக்கத்தில் முக்கியப் பங்கு வகித்த மிஹிர் கோஸ்வாமி (கூச்பிகார் தெற்கு), கிருஷ்ணசந்திர சாந்த்ரா (அரம்பாக்), சில்பத்ரா தத்தா (பராக்பூர்), ஜெகதீஷ் சந்திரா பார்மா பசுனியா (சிட்டாய்) ஆகியோரும் கட்சியின் தலைமையை பகிரங்கமாக விமர்சிக்கின்றனர். சிலர் கட்சியை விட்டு வெளியேறவும் விருப்பம் தெரிவித்துள்ளனர். 

மேலும் அமைச்சர்கள் ராஜீப் பானர்ஜி (வனத் துறை), சாதன் பாண்டே (நுகர்வோர் விவகாரத் துறை) ஆகியோரும் கட்சியின் செயல்பாடு குறித்து புகார் கூறியுள்ளனர்.    

திரிணமூல் காங்கிரஸ் மூத்த தலைவர் ஒருவர் கூறுகையில், அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் மட்டுமின்றி பல கவுன்சிலர்கள், மாவட்டத் தலைவர்களும் கட்சியின் செயல்பாட்டில் அதிருப்தி அடைந்துள்ளனர். நடைபெற உள்ள பேரவைத் தேர்தலில் வேட்பாளராக யாருக்கு வாய்ப்பளிப்பது  என்று மக்களிடம் ஆய்வு செய்து முதல்வர் மம்தாவிடம் அளிக்கும் ஐ- பேக் அமைப்பினர் மீது அவர்களின் கோபம் திரும்பியுள்ளது என்றார்.

திரிணமூல் காங்கிரஸ் கட்சியில் நீண்ட காலமாக உழைக்கும் தங்களை ஆலோசிக்காமல், வெளி நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துகொண்டு மம்தா பானர்ஜி முடிவெடுப்பதை கட்சியினர் யாரும் விரும்பவில்லை. தாங்கள் ஓரங்கட்டப்படுவதாக கட்சியின் மூத்த நிர்வாகிகள் பலரும் கருதுகின்றனர். அண்மையில், ஐ- பேக் நிறுவனத்துக்கு எதிராக கட்சியின் மாநில தலைமையகத்தில் திரிணமூல் தொண்டர்கள் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். கட்சியின் மூத்த தலைவர்கள் தலையிட்ட பிறகே அந்த ஆர்ப்பாட்டம் வாபஸ் பெறப்பட்டது என்றார்.

இதுதொடர்பாக ஐ- பேக் நிறுவனத்திடம் கேட்டபோது, தனது பணிகளை மட்டுமே செய்து வருவதாகவும், மேற்கொண்டு எந்தக் கருத்தும் தெரிவிக்க விரும்பவில்லை என்று தெரிவித்து விட்டது. சுவேந்து அதிகாரி உள்ளிட்ட அதிருப்தியாளர்களுடன் கட்சியின் எம்.பி. செளகதராய் ரகசிய பேச்சு நடத்தி வருகிறார். கட்சி உடைவதைத் தடுக்க மம்தா பானர்ஜியுடன் நெருக்கமாக உள்ள தலைவர்களும் தீவிரமாக முயன்று வருகின்றனர்.

திரிணமூல் காங்கிரஸ் கட்சிக்குள் நடக்கும் பூசல்களை பிரதான எதிர்க்கட்சியான பாஜக ஆர்வமுடன் கவனித்து வருகிறது. அவர்கள் பாஜகவுக்கு வந்தால் அவர்களுக்கு உரிய மரியாதை அளிக்கப்படும் என்று பாஜக மாநிலத் தலைவர் திலீப் கோஷ் தெரிவித்துள்ளார். தலைவர்களின் திறமைகளை முழுமையாக அங்கீகரிக்கும் ஒரே கட்சி பாஜக மட்டுமே என்றும் அவர் கூறியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com