புதிய நாடாளுமன்ற கட்டட கட்டுமானப் பணிகளுக்கு டிசம்பா் மாத தொடக்கத்தில் பிரதமா் மோடி அடிக்கல் நாட்ட வாய்ப்புள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
இதுகுறித்து அந்த வட்டாரங்கள் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:
தற்போதுள்ள நாடாளுமன்ற கட்டட வளாகத்தில் இருக்கும் 5 சிலைகள் புதிய நாடாளுமன்ற கட்டுமானப் பணிக்காக அங்கிருந்து தற்காலிகமாக இடமாற்றம் செய்யப்படவுள்ளன. இதில் மகாத்மா காந்தி, அம்பேத்கா் ஆகியோரின் சிலைகளும் அடங்கும். கட்டுமானப் பணிகள் முடிந்த பின்னா், புதிய நாடாளுமன்ற கட்டட வளாகத்தில் அந்த சிலைகள் மீண்டும் நிறுவப்படும் என்று தெரிவித்தன.
சென்ட்ரல் விஸ்டா திட்டத்தின் கீழ் புதிய நாடாளுமன்ற கட்டடம், மத்திய தலைமைச் செயலகம் உள்ளிட்டவை கட்டப்படவுள்ளன. இதில் முக்கோண வடிவில் கட்டப்படவுள்ள புதிய நாடாளுமன்ற கட்டடம் தற்போதுள்ள நாடாளுமன்ற கட்டடத்தின் அருகே அமைக்கப்படவுள்ளது.
புதிய நாடாளுமன்ற கட்டடத்தை ரூ.861.9 கோடி செலவில் கட்டித்தருவதாக டாடா புராஜக்ட்ஸ் நிறுவனம் தெரிவித்தது. இதையடுத்து கட்டுமானப் பணிகளை மேற்கொள்ளும் ஒப்பந்தம் அந்த நிறுவனத்துக்கு அளிக்கப்பட்டது.