ஆந்திரத்தில் நிவர் புயலால் பெய்த கனமழை காரணமாக பாதிக்கப்பட்ட பகுதிகளை நீர்ப்பாசனத்துறை அமைச்சர் அணில் குமார் நேரில் பார்வையிட்டார்.
வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட பகுதி மக்களிடையே பேசிய அமைச்சர், அரசு சார்பில் போதிய நிவாரண உதவி வழங்கப்படும் என்று உறுதியளித்தார்.
இதனைத்தொடர்ந்து நிவர் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி விமானம் மூலம் நேரடியாகப் பார்வையிடவுள்ளார்.
பின்னர் திருப்பதியில் மாவட்ட ஆட்சியர்களுடன் ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்று வெள்ள பாதிப்பு மற்றும் நிவாரணப் பணிகள் குறித்து ஆலோசனை நடத்தவுள்ளார்.
இதற்கு முன்பு நேற்று (வெள்ளிக்கிழமை) அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இதில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள விவசாயிகளுக்கு 80 சதவிகித மானியத்துடன் விதைகள் வழங்கப்படும் என்றும், மனித உயிரிழப்பு மற்றும் சொத்துக்களுக்கு சேதம் ஏற்படுவது தொடர்பாக வழிகாட்டுதல் நெறிமுறைகளுக்குட்பட்டு நிவாரணம் வழங்கப்படும் என்றும் முடிவு செய்யப்பட்டது.