கரோனா தொற்று பாதிப்பு காரணமாக நடப்பாண்டு இறுதி வரை பள்ளிகள் திறக்கப்படாது என மிசோரம் மாநில அரசு வெள்ளிக்கிழமை தெரிவித்தது.
கரோனா தொற்று பரவல் காரணமாக நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளிகள், கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. தற்போது சூழலில் மாநிலங்களில் நிலவும் தொற்று பாதிப்பு நிலைகளுக்கேற்ப கல்வி நிலையங்கள் திறப்பது குறித்து வெளியாகி வருகின்றன.
இந்நிலையில் மிசோரம் மாநிலத்தில் கடந்த அக்டோபர் 16ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில் மாணவர்களிடையே தொற்று பாதிப்பு அதிகரித்ததால் அந்த முடிவு கைவிடப்பட்டது.
அதனைத் தொடர்ந்து வெள்ளிக்கிழமை மாநில அரசின் சார்பில் பள்ளிகள் திறப்பு குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி கரோனா தொற்று பரவல் காரணமாக அனைத்து வகுப்புகளுக்கும் நடப்பாண்டு இறுதி வரை பள்ளிகள் திறக்கப்படாது மாநில கல்வித்துறை அமைச்சர் லால்சண்டம ரால்டே வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.
அடுத்த ஆண்டு ஜனவரி 15ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்க ஆலோசனையில் ஈடுபட்டு வருவதாகவும் அதற்கான அறிவிப்பு பின்னர் வெளியிடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் மாணவர்களுக்கு இணைய வழியில் வகுப்புகள் நடத்த தடை விதிக்கப்படவில்லை எனவும் மாநில அரசு தெளிவுபடுத்தியுள்ளது.