உத்தரப்பிரதேசம் ஹாத்ராஸில் இளம்பெண் படுகொலையைக் கண்டித்து தில்லி ஜந்தர்மந்தரில் இடதுசாரி கட்சியினர் மற்றும் பீம் ஆர்மியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
உத்தரப்பிரதேச மாநிலம் ஹாத்ராஸ் பகுதியில் பட்டியலினத்தை சேர்ந்த 19 வயது இளம்பெண் ஆதிக்க சமூகத்தை சேர்ந்த 4 பேர் கொண்ட கும்பலால் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொடூரமான முறையில் கொல்லப்பட்டார்.
இதற்கு நாடு முழுவதும் பலத்த எதிர்ப்பு கிளம்பியது. உத்தரப்பிரதேசத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான அரசு சட்டம் ஒழுங்கைக் காப்பதில் தோல்வியடைந்து விட்டதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.
இந்நிலையில் வெள்ளிக்கிழமை தில்லி ஜந்தர்மந்தர் பகுதியில் ஹாத்ராஸ் சம்பவத்தைக் கண்டிக்கும் வகையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியினர் மற்றும் பீம் ஆர்மி அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தில் பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி, “யோகி அரசு உத்தரப்பிரதேசத்தை ஆட்சி செய்வதற்கான தகுதியை இழந்துவிட்டது.” என விமர்சனம் செய்தார்.
போராட்டத்தில் ஹாத்ராஸ் வன்கொடுமைக்கு நீதி வேண்டியும், உத்தரப்பிரதேச அரசைக் கண்டித்தும் கோஷங்கள் எழுப்பப்பட்டன.