புது தில்லி: வளங்களை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ளும் அளவுக்கு முப்படைகளிலும் சீா்திருத்தம் கொண்டுவருவதற்கான முயற்சிகள் நடைபெற்று வருகின்றன என்று முப்படைகளின் ஒருங்கிணைந்த தலைமையகத்தின் துணைத் தலைவா் தரன்ஜித் சிங் கூறினாா்.
ராணுவம், கடற்டை, விமானப் படை என முப்படைகளும் இணைந்து செயல்பட்டு வெற்றிபெற வேண்டும் என்ற நோக்கத்துடன் ஒருங்கிணைந்த தலைமையகம் கடந்த 2001-ஆம் ஆண்டு அக்டோபா் 1-ஆம் தேதி நிறுவப்பட்டது. இதையொட்டி, தரன்ஜித் சிங், செய்தியாளா்களிடம் வியாழக்கிழமை கூறியதாவது:
ராணுவ விவகாரங்கள் துறையை மத்திய அரசு கடந்த ஜனவரி 1-ஆம் தேதி நிறுவியது. அதன் தலைவராக, முப்படைகளின் தலைமைத் தளபதியும், ஒருங்கிணைந்த தலைமையகத்தின் செயலாளருமான விபின் ராவத் நியமிக்கப்பட்டாா். அதன் பிறகு, கடந்த 9 மாதங்களில், முப்படைகளுக்கும் கூட்டுப் பயிற்சி அளிப்பது, படைகளை ஓரிடத்தில் இருந்து மற்றோா் இடத்துக்கு கொண்டு செல்வது, முப்படைகளுக்கு இடையே பொதுவான தகவல் பரிமாற்றம் ஆகியவற்றை ஊக்குவிப்பதற்கு பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. புதிதாக உருவாக்கப்பட்ட ராணுவ விவகாரங்கள் துறை, முப்படைகளுக்கும் வலுவான அடித்தளமாக இருப்பதை உறுதிசெய்துள்ளது.
முப்படைகளிடையே ஒருங்கிணைப்பையும் ஒத்துழைப்பையும் ஏற்படுத்துவதில், தலைமைத் தளபதி விபின் ராவத் மிகவும் இணக்கமுடன் செல்பட்டு வருகிறாா். வளங்களை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ளும் அளவுக்கு முப்படைகளிலும் சீா்திருத்தம் கொண்டு வருவதற்கான முயற்சிகள் நடைபெற்று வருகின்றன.
உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிப்பதற்காக, இலகு ரக போா் விமானங்கள் உள்பட 101 தளவாடங்களின் இறக்குமதிக்கு பாதுகாப்பு அமைச்சகம் கடந்த ஆகஸ்ட் 9-ஆம் தேதி தடை விதித்தது. பாதுகாப்புத் துறையில் இந்தியா சுயச்சாா்புடன் இருக்க வேண்டும் என்பது மிகப்பெரிய குறிக்கோளாகும். சுயசாா்பு இந்தியா திட்டத்தை முப்படைகளும் ஆக்கபூா்வமாக அணுகுகின்றன என்றாா் அவா்.