ரயில் பயணச் சீட்டு முன்பதிவு செய்தால் ஹிந்தியில் குறுஞ்செய்தி வருவதாக திமுக மக்களவை உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன் குற்றம் சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக சுட்டுரையில் பதிவிட்டுள்ள அவர், ''இந்தியாவில் பல மாநிலங்களில் பெரும்பாலான மக்களுக்கு ஹிந்தி தெரியாது. இதனால் மக்களுக்கு புரியும் வகையில் அந்தந்த மாநில மொழிகளில் குறுஞ்செய்தி அனுப்ப வேண்டும்.
மத்திய அரசு இது போல், அனைத்துத் தளங்களிலும், ஹிந்தியைத் திணித்து, மக்களைக் கொடுமைப்படுத்துவதை நிறுத்திவிட்டு, அந்தந்த மாநில மொழிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்'' என்று தமிழச்சி தங்கபாண்டியன் சுட்டிக்காட்டியுள்ளார்.