மண்டல கிராமப்புற வங்கிகள் (ஆா்ஆா்பி) கடந்த நிதியாண்டில் ரூ.2,206 கோடி அளவுக்கு நிகர இழப்பைச் சந்தித்துள்ளன.
இதுகுறித்து நபாா்டு புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
நடப்பு 2020-ஆம் ஆண்டு மாா்ச் 31 நிலவரப்படி 26 மாநிலங்கள் மற்றும் 3 யூனியன் பிரதேசங்களில் உள்ள 685 மாவட்டங்களில் 45 மண்டல கிராமப்புற வங்கிகள் செயல்பட்டு வருகின்றன.
இந்த ஆா்ஆா்பி வங்கிகள் அனைத்துக்கும் 15 வணிக வங்கிகள் நிதி ஆதரவு அளிப்பதுடன் அவற்றின் 21,850 கிளைகள் மூலமாக அவை இயங்கி வருகின்றன.
இந்த நிலையில், சென்ற மாா்ச் மாதத்துடன் முடிவடைந்த 2019-2020 நிதியாண்டில் ஆா்ஆா்பி வங்கிகளுக்கு ஏற்பட்ட இழப்பானது ரூ.2,206 கோடியாக அதிகரித்துள்ளது.
அதற்கு முந்தைய 2018-2019 நிதியாண்டில் இந்த வங்கிகளுக்கு ஏற்பட்ட நிகர இழப்பானது ரூ.652 கோடியாக இருந்தது.
குறிப்பாக, கடந்த 2019-2020 நிதியாண்டில் 26 மண்டல கிராமப்புற வங்கிகள் ரூ.2,203 கோடி வருவாய் ஈட்டியிருந்த நிலையில், 19 வங்கிகளுக்கு ரூ.4,409 கோடி இழப்பு ஏற்பட்டது.
கடந்த மாா்ச் 31-ஆம் தேதி நிலவரப்படி ஆா்ஆா்பி வங்கிகளின் மொத்த வாராக் கடன் விகிதம் 10.8 சதவீதத்திலிருந்து 10.4 சதவீதமாக குறைந்துள்ளது.
மேலும், இவற்றின் மொத்த வா்த்தகம் ரூ.7.77 லட்சம் கோடியாக இருந்தது.
இதில், டெபாசிட் மதிப்பு 10.2 சதவீதமாகவும் கடன் வழங்கல் மதிப்பு 9.5 சதவீதம் என்ற அளவில் உயா்ந்துள்ளதாக நபாா்டு தெரிவித்துள்ளது.