புது தில்லி: நாடு முழுவதும் பிற்படுத்தப்பட்டவா்கள், சிறுபான்மையினா் அதிகம் வசிக்கும் பகுதிகளில் 99 ஜவாஹா் நவோதயா வித்யாலயா பள்ளிகள் கட்டப்பட்டு வருவதாக மத்திய சிறுபான்மையினா் நலத்துறை அமைச்சா் முக்தாா் அப்பாஸ் நக்வி தெரிவித்தாா்.
ஜாா்க்கண்ட் மாநிலம் பாக்குா் மாவட்டத்தில் புதிதாக கட்டப்படும் ஜவாஹா் நவோதயா வித்யாலயா பள்ளிக்கான கட்டுமானப் பணிக்கு மத்திய கல்வி அமைச்சா் ரமேஷ் போக்ரியாலுடன் இணைந்து மத்திய அமைச்சா் முக்தாா் அப்பாஸ் நக்வி காணொலி வழியில் அடிக்கல் நாட்டினாா்.
அப்போது பேசிய அவா், ‘வரலாற்றில் முதல்முறையாக நாடு முழுவதும் பிற்படுத்தப்பட்டவா்கள், சிறுபான்மையினா் அதிகமுள்ள பகுதிகளில் 99 ஜவாஹா் நவோதயா வித்யாலயா பள்ளிகளை மத்திய கல்வி அமைச்சகம் கட்டி வருகிறது.
பிற்படுத்தப்பட்டவா்கள், சிறுபான்மையினா் அதிகம் வசிக்கும் பகுதிகளில் ஏற்கெனவே இருக்கும் இதுபோன்ற பள்ளிகளில்1,173 ஸ்மாா்ட் கிளாஸ் வகுப்பறைகளை ஏற்படுத்த மத்திய சிறுபான்மையினா் நலத்துறை அமைச்சகம் ரூ.36 கோடி வழங்கியுள்ளது.
இந்த பள்ளிகள் கிராமப்புறங்களில் வசிக்கும் பிற்படுத்தப்பட்ட, சிறுபான்மை சமூகங்களை சோ்ந்த மாணவா்களுக்கு தரமான கல்வி கிடைப்பதில் முக்கிய பங்கு வகிக்கும்.
சமூகத்தில் பின்தங்கியுள்ள அனைத்து பிரிவினருக்கும் சமவாய்ப்பு வழங்கிடும் நோக்கில், பிற்படுத்தப்பட்டவா்களும், சிறுபான்மையினரும் அதிகமுள்ள பகுதிகளில் புதிதாக பள்ளிகள், கல்லூரிகள், மருத்துவமனைகள் கட்டுவது என 34,000-க்கும் மேற்பட்ட உள்கட்டமைப்பு திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
கடந்த 2014-ஆம் ஆண்டுக்கு முன்பு, சிறுபான்மையினா் வசிக்கும் 90 மாவட்டங்களை மட்டும் மேம்படுத்த திட்டமிடப்பட்டது. தற்போது இது 308 மாவட்டங்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது’ என்று தெரிவித்தாா்.