பெங்களூரு: போதைப்பொருள் விவகாரம் தொடர்பாக கேரள மாநில மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் கொடியேறி பாலகிருஷ்ணன் மகன் பினீஷ் கொடியேறி பெங்களூரு அமலாக்க இயக்குநர அதிகாரிகள் முன்பு செவ்வாய்க்கிழமை ஆஜரானார்.
கர்நாடகத்தில் போதைப்பொருள் விவகாரம் தொடர்பாக அனிகா, டி.ஆர்.ரவீந்திரன், முகமது அனூப் உள்ளிட்டோர் ஆகஸ்ட் மாதத்தில் கைது செய்யப்பட்டனர். இவர்கள் 3 பேர் உள்பட பலருக்கு போதைப்பொருள் விவகாரத்தில் தொடர்புள்ளதாகக் கூறப்பட்டது.
இது தொடர்பாக, நடிகைகள் ராகினி துவிவேதி, சஞ்சனா கல்ராணி உள்ளிட்டோரும் கைது செய்யப்பட்டனர். போதைப்பொருள் விவகாரத்தில் சஞ்சனா கல்ராணியிடம் அமலாக்க இயக்குநரக அதிகாரிகள் ஏற்கெனவே விசாரணை மேற்கொண்டனர். இந்த நிலையில், போதைப்பொருள் விவகாரத்தில் தொடர்புடைய ஒருவருக்கும் கேரளா மாநில மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் கொடியேறி பாலகிருஷ்ணன் மகன் பினீஷ் கொடியேறிக்கும் தொடர்பு உள்ளதாகக் கூறப்பட்டது.
இதனையடுத்து, பினீஷ் கொடியேறி பெங்களூரில் உள்ள அமலாக்க இயக்குநர அலுவலகத்துக்கு செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு ஆஜராகும்படி நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அதை அடுத்து அமலாக்க இயக்குநரக அதிகாரிகள் முன்பு செவ்வாய்க்கிழமை பினீஷ் கோடியேறி ஆஜரானார். அவரிடம் அமலாக்க இயக்குநரக அதிகாரிகள் போதைப்பொருள் விவகாரம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டனர்.