பெங்களூரு: விசாரணைக்கு ஆஜராக கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமாருக்கு சிபிஐ அழைப்பாணை அனுப்பியுள்ளது.
கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமாரின் இல்லம், அலுவலகங்கள் உள்ளிட்ட 14 இடங்களில் திங்கள்கிழமை சிபிஐ அதிகாரிகள் சோதனையிட்டனர். சோதனையின் போது, ரூ. 57 லட்சம் ரொக்கம், பல்வேறு ஆவணங்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக மேற்கொள்ளப்படும் விசாரணைக்கு ஆஜராகும்படிஅவருக்கு சிபிஐ அதிகாரிகள் அழைப்பாணை அனுப்பியுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து, டி.கே.சிவகுமார் இரண்டொரு நாளில், பெங்களூரு,ஆர்.டி.நகர் காவல் சரகம், கங்கா நகரில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் ஆஜராவார் எனத் தெரிகிறது.
பணப்பதுக்கல் தொடர்பாக 2019 செப். 23}ஆம் தேதி அமலாக்க இயக்குநரக அதிகாரிகள் சிவகுமாரை கைது செய்து திகார் சிறையில் அடைத்தனர். அதனைத் தொடர்ந்து, அக். 23}ஆம் தேதி உயர்நீதிமன்ற உத்தரவின் பேரில் அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
இந்த நிலையில், வருமானத்துக்கு அதிகமான சொத்துக் குவிப்பு வழக்கை சிபிஐ விசாரணைக்கு எடுத்துள்ளதால், டி.கே.சிவகுமார் மீண்டும் கைது செய்யப்படக்கூடும் என அவரது ஆதரவாளர்களும், காங்கிரஸ் கட்சியினரும் அஞ்சுகின்றனர்.