ஆம் ஆத்மி எம்.எல்.ஏ. மீது தொற்றுநோய் பரப்பியதாக வழக்கு
கரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், ஹாத்ரஸ் பகுதிக்குச் சென்றதால் ஆம் ஆத்மி எம்.எல்.ஏ. குல்தீப் குமார் மீது தொற்றுநோய் பரவல் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம் ஹாத்ரஸ் பகுதியில் பட்டியலினத்தைச் சேர்ந்த 19 வயது இளம்பெண் ஆதிக்க சமூகத்தை சேர்ந்த 4 நபர்களால் கூட்டுப்பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொடூரமான முறையில் கொல்லப்பட்டார்.
இதனைத்தொடர்ந்து அரசியல் கட்சியினர் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை தொடர்ந்து சென்று சந்தித்து ஆறுதல் கூறி வருகின்றனர். அந்தவகையில் ஆம் ஆத்மி சட்டமன்ற உறுப்பினரான குல்தீப் குமார் ஹாத்ரஸ் பகுதிக்கு கடந்த 4-ஆம் தேதி நேரில் சென்று பார்வையிட்டார்.
எனினும் செப்டம்பர் 29-ஆம் தேதி இவருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. தமது சுட்டுரைப் பக்கத்திலும் இதனை அவர் உறுதிப்படுத்தியுள்ளார்.
இதனிடையே கரோனா உறுதி செய்யப்பட்ட 4 நாள்களில் ஹாத்ரஸ் பகுதிக்குச் சென்று பாதிக்கப்பட்டவர்களை சந்தித்த குல்தீப் குமாருக்கு பல்வேறு அரசியல் கட்சியினர் கண்டனம் தெரிவித்தனர்.
இதனிடையே தொற்று நோய் பரப்பியதாக குல்தீப் குமார் மீது ஹாத்ரஸ் காவல் கண்காணிப்பாளர் வழக்குப் பதிவு செய்துள்ளார்.