தில்லி மருத்துவமனையில் கடந்த ஜூன் மாதம் முதல் ஊதியம் வழங்காததை கண்டித்து மருத்துவர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
வடக்கு தில்லியில் மாநகராட்சியில் மிகப்பெரிய மருத்துவமனையான ஹிந்து ராவ் மருத்துவமனையில் கடந்த ஜூன் மாதம் முதல் மருத்துவர்களுக்கும், மருத்துவப் பணியாளர்களுக்கும் ஊதியம் வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.
இதனைக் கண்டித்து பணியை புறக்கணித்து மருத்துவர்கள் வளாகத்திலேயே போராட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த ஜூன் மாதத்திலிருந்து ஊதியம் வழங்கவில்லை என்றும், ஊதியம் வழங்கவில்லை என்றால் இனி பணியில் ஈடுபட இயலாது என்றும் மருத்துவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
ஊதியம் வழங்காததால், பொருளாதார ரீதியில் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருவதாகவும், இது குறித்து கடிதம் மூலம் வலியுறுத்தியும் மருத்துவமனை நிர்வாகம் எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை என்பதால் மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
குறைந்தபட்சம் மூன்றுமாத ஊதியங்களையாவது வழங்கி இந்தப் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்று மருத்துவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.