ஆஸ்திரேலிய வெளியுறவுத்துறை அமைச்சர் மாரிஸ் பெய்ன் உடன் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் பேச்சுவார்த்தை நடத்தினார்.
‘குவாட்’ என்றழைக்கப்படும் நாற்கர கூட்டமைப்பைச் சோ்ந்த இந்தியா, அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா ஆகியவற்றின் வெளியுறவு அமைச்சா்கள் பங்கேற்ற மாநாடு ஜப்பான் தலைநகா் டோக்கியோவில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இதில் கலந்துகொண்டு அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியோவுடன் அமைச்சர் ஜெய்சங்கர் இருதரப்பு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.
இன்று ஜப்பான் வெளியுறவுத்துறை அமைச்சர் தோஷிமிட்சு மொடேகியை (Toshimitsu Motegi) சந்தித்து இருதரப்பு பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட நிலையில், ஆஸ்திரேலிய வெளியுறவுத்துறை அமைச்சரையும் சந்தித்து இருதரப்பு பேச்சுவார்த்தையில் ஜெய்சங்கர் ஈடுபட்டார்.
இதன் பிறகு சுட்டுரயில் அவர் பதிவிட்டுள்ளதாவது, ''எனது நல்ல நண்பரான மாரிஸ் பெய்ன் உடனான சந்திப்பு இனிமையானதாக அமைந்தது.
இரு நாட்டு பிரதமர்களும் கடந்த சில நாள்களுக்கு முன்பு காணொலி மாநாட்டில் கலந்துகொண்டு பேசிய பிறகான இருதரப்பு உறவுகளின் முன்னேற்றம் குறித்து மதிப்பாய்வு செய்யப்பட்டது.
மேலும் பலத்தரபட்ட சூழல்களில் இணைந்து பணியாற்றுவது குறித்தும் விவாதிக்கப்பட்டது'' என்று அமைச்சர் ஜெய்சங்கர் பதிவிட்டுள்ளார்.