லக்னௌ: உத்தரப்பிரதேச மாநிலம் ஹாத்ரஸ் சம்பவத்தில் திடீர் திருப்பமாக, குற்றம்சாட்டப்பட்டவர்களில் முக்கிய நபருடன், பெண்ணின் குடும்பத்தினர் நெருங்கிய தொடர்பில் இருந்ததற்கான ஆதாரங்கள் கிடைக்கப் பெற்றுள்ளதாக விசாரணை அமைப்புத் தெரிவித்துள்ளது.
சம்பவம் நடப்பதற்கு வெகு சமீபம் வரையிலும், பலியான பெண்ணின் குடும்பத்தினர், குற்றம்சாட்டப்பட்டவர்களில் முக்கிய நபருடன் தொலைபேசி வாயிலாக தொடர்ந்து பேசிக் கொண்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக விசாரணை அமைப்புத் தெரிவித்துள்ளது.
தொலைபேசி அழைப்பு உரையாடல்களை பதிவு செய்திருப்பதை அடிப்படையாக வைத்துப் பார்த்தால், பலியான பெண்ணின் சகோதரர் பெயரில் வாங்கப்பட்ட செல்லிடப்பேசி எண்ணில் இருந்து, முக்கிய நபரின் செல்லிடப்பேசி எண்ணுக்கு கடந்த ஐந்து மாதங்களில் மட்டும் நூறுக்கும் மேற்பட்ட அழைப்புகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பல அழைப்புகள் ஒரு சில நிமிடத்துக்குள்பட்டதாக இருந்தாலும், கிடைத்திருக்கும் சாட்சிகளை அடிப்படையாக வைத்து, பலியான பெண்ணின் சகோதரரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்த திட்டமிட்டிருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.