புது தில்லி: கரோனா பொதுமுடக்கம் காரணமாக லக்னௌ - புது தில்லி, ஆமதாபாத் - மும்பை இடையே இயக்கப்பட்டு வந்த 'தனியார்' தேஜஸ் விரைவு ரயில் சேவை அக்டோபர் 17 முதல் மீண்டும் தொடங்க உள்ளதாக ஐஆர்சிடிசி அறிவித்துள்ளது.
சமூக இடைவெளியை உறுதி செய்யும் வகையில், ஒரு இருக்கை விட்டு ஒரு இருக்கை பயணிகளுக்கு ஒதுக்கப்படும் என்றும், ரயிலில் ஏறும் முன், பயணிகளுக்கு உடல்வெப்ப சோதனை நடத்தப்படும், ஒரு பயணி தனது இருக்கையில் அமர்ந்த பிறகு அதனை மாற்றிக் கொள்ள அனுமதிக்கப்படாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், கிருமிநாசினி, முகக்கவசம், முகப்பாதுகாப்புப் கவசம், ஒரு ஜோடி கையுறைகள் கொண்ட கரோனா தற்காப்புப் பெட்டியும் பயணிகளுக்கு வழங்கப்பட உள்ளது.
இந்த ரயிலில் பயணிக்கும் பயணிகள் அனைவரும் ஆரோக்கிய சேதுவை தங்களது செல்லிடப்பேசியில் பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.