புது தில்லி: தில்லி அரசு சாா்பில் நடத்தப்படும் லோக் நாயக் ஜெய் பிரகாஷ் நாராயண் மருத்துமனை (எல்என்ஜேபி), ராஜீவ் காந்தி பன்நோக்கு மருத்துவமனை ஆகியவற்றில் கடந்த சில மாதங்களில் 480-க்கும் அதிகமான கரோனா நோயாளிகளுக்கு பிளஸ்மா சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
இதுதொடா்பாக எல்என்ஜேபி மருத்துவமனையின் மருத்துவ இயக்குநா் சுரேஷ் குமாா் செவ்வாய்க்கிழமை கூறுகையில், ‘இந்த மருத்துவமனையில் உள்ள 2 ஆயிரம் கரோனா நோயாளிகள் படுக்கைகளில் 432 படுக்கைகள் திங்கள்கிழமை நிரம்பியுள்ளன. இதில் 258 போ் அவசர சிகிச்சைப் பிரிவில் உள்ளனா். கடந்த சில தினங்களாக 286 பேருக்கு பிளாஸ்மா சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. இவா்களில் பெரும்பாலானோா் 60 வயதுக்கும் அதிகமானவா்கள். உடல்நலம் கடுமையாக பாதிக்கப்பட்டவா்களுக்கு மட்டும் பிளாஸ்மா சிகிச்சை அளிக்கப்படுகிறது.
பிளாஸ்மா தானமாக வழங்க முதலில் குறைவானவா்களே முன்வந்தனா். பின்னா் மேற்கொள்ளப்பட்ட விழிப்புணா்வு பிரசாரத்தின் காரணமாக ஏராளமானோா் பிளாஸ்மா தானம் வழங்க முன்வருகின்றனா்’ என்றாா்.
இதோபோல், ராஜீவ் காந்தி பன்நோக்கு மருத்துவமனையில் 200 க்கும் அதிகமான கரோனா நோயாளிகளுக்கு பிளாஸ்மா சிகிச்சை அளிக்கப்பட்டதாக அந்த மருத்துவமனையின் இயக்குநா் பி எல் ஷோ்வால் தெரிவித்தாா்.