உத்தரப்பிரதேச மாநிலத்தில் ஹாத்ரஸ் கூட்டுப்பாலியல் வன்கொடுமை விவகாரத்தை விசாரித்து வரும் சிறப்பு விசாரணைக் குழுவின் விசாரணைக்காலத்தை மேலும் 10 நாள்களுக்கு முதல்வர் யோகி ஆதித்யநாத் நீட்டித்துள்ளார்.
உத்தரப்பிரதேச மாநிலம் ஹாத்ரஸ் பகுதியில் பட்டியலினத்தைச் சேர்ந்த 19 வயது இளம்பெண் ஆதிக்க சமூகத்தை சேர்ந்த 4 நபர்களால் கூட்டுப்பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொடூரமான முறையில் கொல்லப்பட்டார்.
இதில், இளம்பெண்ணின் உடலை அவர்களது பெற்றோர்களின் முழு அனுமதியையும் மீறி காவல்துறையினரே அவசரமாக அவசரமாக எரித்தனர்.
இந்த சம்பவம் நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதனை கண்டித்து பல்வேறு பெண்கள் அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சியினர் சார்பில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
கூட்டுப்பாலியல் வன்கொடுமை தொடர்பாக விசாரணை நடத்த சிறப்பு விசாரணைக் குழுவினை அமைத்து முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டார்.
இந்த விவகாரம் தொடர்பாக சிறப்பு விசாரணை குழுவினர் ஹாத்ரஸ் பகுதிக்குச் சென்று பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தை சந்தித்து விசாரணை மேற்கொண்டனர். சம்பவம் நடைபெற்ற பகுதியிலும் சிறப்பு விசாரணைக் குழுவினர் ஆய்வு மேற்கொண்டு முதல்வர் யோகி ஆதித்யநாத்திடம் முதற்கட்ட அறிக்கை தாக்கல் செய்துள்ளனர்.
ஏழு நாள்களுக்குள் விசாரணை நடத்தி முடிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டிருந்த நிலையில், சிறப்பு விசாரணை குழுவின் விசாரணைக் காலத்தை மேலும் 10 நாள்களுக்கு நீட்டித்து முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார்.