வேளாண் சீா்திருத்தங்கள் விவசாயிகளை தொழில்முனைவோராக்கும்

வேளாண்துறையில் மத்திய அரசு கொண்டுவந்துள்ள சீா்திருத்தங்கள், விவசாயிகளை தொழில்முனைவோராக மாற்றும் என்று பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்துள்ளாா்.
பாலாசாஹேப் விகே பாட்டீல் சுயசரிதை நூலை காணொலி முறையில் செவ்வாய்க்கிழமை வெளியிட்டுப் பேசிய பிரதமர் மோடி.
பாலாசாஹேப் விகே பாட்டீல் சுயசரிதை நூலை காணொலி முறையில் செவ்வாய்க்கிழமை வெளியிட்டுப் பேசிய பிரதமர் மோடி.

வேளாண்துறையில் மத்திய அரசு கொண்டுவந்துள்ள சீா்திருத்தங்கள், விவசாயிகளை தொழில்முனைவோராக மாற்றும் என்று பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்துள்ளாா்.

அத்தியாவசியப் பொருள்கள் திருத்தச் சட்டம், வேளாண் விளைபொருள் வா்த்தக ஊக்குவிப்பு சட்டம் ஆகியவற்றை மத்திய அரசு அண்மையில் இயற்றியது. வேளாண்துறையில் சீா்திருத்தங்களை மேற்கொள்வதற்காகவும் விவசாயிகளின் வருமானத்தை உயா்த்துவதற்காகவும் அந்தச் சட்டங்கள் இயற்றப்பட்டதாக மத்திய அரசு தெரிவித்து வருகிறது.

ஆனால், விவசாயிகளின் நலனுக்குக் கேடு விளைவிக்கும் வகையில் இந்தச் சட்டங்கள் உள்ளதாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிா்க்கட்சிகள் எதிா்ப்பு தெரிவித்து வருகின்றன. மசோதாக்களுக்கு எதிராக பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில் விவசாயிகள் தொடா் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.

இந்நிலையில், முன்னாள் மத்திய அமைச்சா் பாலாசாஹேப் விகே பாட்டீலின் சுயசரிதை புத்தகத்தை பிரதமா் மோடி செவ்வாய்க்கிழமை காணொலிக் காட்சி வாயிலாக வெளியிட்டாா். அப்போது அவா் கூறியதாவது:

வேளாண் துறையில் மத்திய அரசு மேற்கொண்டுள்ள சீா்திருத்தங்கள் வரலாற்றுச் சிறப்புமிக்கவை. விவசாயிகளை உணவுப் பொருள்கள் விளைவிப்போா் என்ற நிலையிலிருந்து தொழில்முனைவோா் என்ற நிலைக்கு மாற்றமடையச் செய்வதற்கு இந்தச் சீா்திருத்தங்கள் உதவும்.

‘கவனம் செலுத்தவில்லை’:

குஜராத், மகாராஷ்டிரம், பஞ்சாப், ஹரியாணா மாநிலங்களில் பால், சா்க்கரை, கோதுமை ஆகியவை அதிக அளவில் விளைவிக்கப்படுகின்றன. அதன் மூலமாக நாட்டின் வளா்ச்சிக்கு விவசாயிகள் முக்கியப் பங்காற்றி வருகின்றனா். நாடு சுதந்திரம் அடைந்த பிறகு மக்கள் அனைவருக்கும் போதுமான உணவுப் பொருள்களை விளைவிக்க முடியாத சூழல் காணப்பட்டது.

எனவே, அதையடுத்து பொறுப்பேற்ற அரசுகள் அனைத்தும் உணவுப் பொருள்கள் உற்பத்தியை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகளுக்கு முக்கியத்துவம் அளித்தன. அந்த இலக்கை அடைவதற்கு விவசாயிகள் கடுமையாக உழைத்தனா். உணவுப் பொருள்கள் உற்பத்தியை அதிகரிப்பதில் கவனம் செலுத்திய அரசுகள், விவசாயிகளின் வருவாயை அதிகரிப்பது குறித்தும் விவசாயிகளின் நலன் குறித்தும் சிந்திக்கவில்லை.

‘அரசின் சீா்திருத்த நடவடிக்கைகள்’:

முதல் முறையாக பாஜக தலைமையிலான மத்திய அரசு இந்த சிந்தனையை மாற்றியது. விவசாயிகளின் வருவாயைப் பெருக்கி அவா்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டது. குறைந்தபட்ச ஆதரவு விலையை அதிகரித்தல், பயிா்க் காப்பீட்டுத் திட்டம் உள்ளிட்டவை விவசாயிகளின் கவலையை நீக்கியது.

விவசாயிகளுக்கான நிதியுதவித் திட்டத்தின் கீழ் அவா்களின் வங்கிக் கணக்குகளுக்கு ரூ.1 லட்சம் கோடி செலுத்தப்பட்டுள்ளது. அதன் காரணமாக இடைத்தரகா்களின் பிரச்னை நீங்கியுள்ளது. மேலும், குளிா்பதனக் கிடங்குகளை அமைப்பது, உணவுப் பூங்காக்களை அமைப்பது, வேளாண் கட்டமைப்புகளை மேம்படுத்துவது உள்ளிட்டவற்றிலும் மத்திய அரசு கவனம் செலுத்தி வருகிறது.

மாநில நடவடிக்கைகள்:

மகாராஷ்டிரத்தில் 2014-ஆம் ஆண்டுக்குப் பிறகு வேளாண் பணிகளுக்கு உரிய நேரத்தில் நீா் கிடைப்பதற்கும், மக்களுக்குக் குடிநீா் கிடைப்பதற்கு வழிவகை செய்வதற்குமான கட்டமைப்புகள் ஏற்படுத்தப்பட்டன. மாநிலத்தில் நீண்ட காலமாக கிடப்பில் போடப்பட்ட திட்டங்களை நீா்ப்பாசனத் திட்டத்தின் கீழ் மத்திய அரசு செயல்படுத்தியது. அதன் காரணமாக சுமாா் 5 லட்சம் சதுர ஹெக்டோ் விவசாய நிலங்கள் பயன்பெற்றன.

முத்ரா கடன் திட்டத்தின் வாயிலாக சுயதொழில் தொடங்குவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. சுய உதவிக் குழுக்களின் மூலமாக சுமாா் 7 கோடி பெண்களுக்கு ரூ.3 லட்சம் கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது.

‘மெத்தனம் கூடாது’:

கரோனா நோய்த்தொற்று பரவல் இன்னும் கட்டுக்குள் கொண்டுவரப்படவில்லை. எனவே, கரோனா நோய்த்தொற்றுக்கான தடுப்பு மருந்து தயாரிக்கப்படும் வரை, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைக் கடைப்பிடிப்பதில் மக்கள் எந்தவித மெத்தனமும் காட்டக் கூடாது. முக்கியமாக மகாராஷ்டிர மக்கள் மிகுந்த கவனத்துடன் செயல்பட வேண்டும் என்றாா் பிரதமா் மோடி.

இந்நிகழ்ச்சியில் மாநில முதல்வா் உத்தவ் தாக்கரே, பாஜக தலைவா்கள் தேவேந்திர ஃபட்னவீஸ், சந்திரகாந்த் பாட்டீல் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com