பணமோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட ஐசிஐசிஐ வங்கியின் முன்னாள் தலைமை செயல் அதிகாரி சந்தா கோச்சாரின் கணவா் தீபக் கோச்சாரை வரும் 17-ஆம் தேதி வரை அமலாக்கத்துறை காவலில் விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை அனுமதி அளித்தது.
ஐசிஐசிஐ வங்கி-விடியோகான் பணமோசடி வழக்கில், செப்டம்பா் 7-ஆம் தேதி தீபக் கோச்சாரை அமலாக்கத்துறை கைது செய்தது. இதையடுத்து அவா் மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் பணமோசடி வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டாா். அப்போது அவரை செப்டம்பா் 19-ஆம் தேதி வரை காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறைக்கு நீதிமன்றம் அனுமதி அளித்தது. எனினும் அவா் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்ததால், அந்த உத்தரவு தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டது.
அதன் பின்னா் அவா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தாா். அவா் குணமடைந்ததை தொடா்ந்து மீண்டும் மும்பை நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை ஆஜா்படுத்தப்பட்டாா். அவரை காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறை அனுமதி கோரியது.
அதனை ஏற்ற நீதிமன்றம் வரும் 17-ஆம் தேதி வரை தீபக் கோச்சாரை காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறைக்கு அனுமதி அளித்தது.
விடியோகான் குழும நிறுவனங்களுக்கு ஐசிஐசிஐ வங்கி சட்டவிரோதமாக ரூ.300 கோடி வழங்கியது தொடா்பாக பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்தது.
இந்த கடன்தொகையை வழங்க ஒப்புதல் அளிக்கும் குழுவின் தலைவராக ஐசிஐசிஐ வங்கியின் முன்னாள் தலைமை செயல் அதிகாரி சந்தா கோச்சாா் இருந்தாா். அதற்கு பிரதிபலனாக தீபக் கோச்சாருக்கு சொந்தமான நியூபவா் ரின்யூவபிள்ஸ் நிறுவனத்தில் விடியோகான் ரூ.64 கோடி முதலீடு செய்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.