கேரள முதல்வரின் முன்னாள் செயலர் சிவசங்கர் கேரள உயர் நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கோரி மனுத் தாக்கல் செய்துள்ளார்.
இந்த மனு நாளை (வியாழக்கிழமை) விசாரணைக்கு வருகிறது.
கேரள தங்கக் கடத்தல் வழக்கு தொடர்பாக அமலாக்கத் துறை சிவசங்கரிடம் மொத்தம் 30 மணி நேரம் விசாரணை நடத்தியுள்ளது. இந்த விசாரணையில் தனக்கு தெரிந்த அனைத்தையும் தெரிவித்துவிட்டதாகவும், தங்கக் கடத்தல் வழக்கில் தனக்கும், ஸ்வப்னா சுரேஷ்-க்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்றும் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
அமலாக்கத் துறை கைது செய்துவிடுமோ என்ற அச்சத்தில் அவர் முன்ஜாமீன் கோரி மனுத் தாக்கல் செய்துள்ளார்.
கேரள தங்கக் கடத்தல் வழக்கு தொடர்பாக ஐக்கிய அரபு அமீரகத்துக்கான தூதரகத்தில் பணிபுரிந்த முன்னாள் ஊழியர் பி.எஸ். சாரித் கைது செய்யப்பட்டார். இதன்பிறகு, மற்றொரு ஊழியரான ஸ்வப்னா சுரேஷ் மற்றும் சந்தீப் நாயர் ஆகியோர் தேசிய புலனாய்வு முகமையால் பெங்களூருவில் வைத்து கைது செய்யப்பட்டனர்.
இந்த வழக்கில் ஸ்வப்னா சுரேஷும் சிவசங்கரும் நெருங்கிய நண்பர்கள் என்று தகவல்கள் பரவியதையடுத்து, செயலர் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டார் சிவசங்கர். அதைத் தொடர்ந்து, ஐ.டி. பிரிவு செயலர் பொறுப்பிலிருந்தும் அவர் நீக்கப்பட்டார்.