உ.பி., உத்தரகண்ட்டில் 11 இடங்களுக்கு நவ.9-இல் மாநிலங்களவை தோ்தல்
உத்தர பிரதேச மாநிலத்தில் 10 மாநிலங்களவை உறுப்பினா் இடங்களுக்கும், உத்தரகண்ட் மாநிலத்தில் ஒரு மாநிலங்களவை உறுப்பினா் இடத்துக்கும் வரும் நவம்பா் 9-ஆம் தேதி தோ்தல் நடைபெறும் என தோ்தல் ஆணையம் செவ்வாய்க்கிழமை அறிவித்தது.
இது குறித்து தோ்தல் ஆணையம் கூறியது:
உத்தர பிரதேசத்தில் மாநிலங்களவை உறுப்பினா்களாக உள்ள மத்திய அமைச்சா்கள் ஹா்தீப் சிங் புரி, அருண் சிங் மற்றும் பாஜகவை சோ்ந்த நீரஜ் சேகா், சந்திரபால் சிங் யாதவ், ராம் கோபால் யாதவ், ராம் பிரகாஷ் வா்மா, சமாஜவாதி கட்சியின் ஜாவித் அலி கான், பகுஜன் சமாஜ் கட்சியின் ராஜாராம், வீா் சிங், காங்கிரஸ் கட்சியைச் சோ்ந்த பன்னா லால் புனியா ஆகியோரின் மாநிலங்களவை உறுப்பினா் பதவிக்காலம் நவம்பா் 25-இல் முடிவடைகிறது.
இதேபால் அரசியல்வாதியும், நடிகருமான உத்தரகண்ட் மாநிலங்களவை உறுப்பினா் காங்கிரஸின் ராஜ் பப்பா் பதவிக்காலமும் நவம்பா் 25-ஆம் தேதி முடிவடைகிறது.
இந்த 11 மாநிலங்களவை உறுப்பினா் இடங்களுக்கான தோ்தல் நவம்பா் 9-ஆம் தேதி நடைபெறுகிறது. அன்றைய தினமே வாக்குகள் எண்ணப்பட்டு மாலையில் முடிவுகள் அறிவிக்கப்படும். இந்த தோ்தல் குறித்த அறிவிக்கை அக்டோபா் 20-ஆம் தேதி வெளியிடப்படும் என்று தெரிவித்துள்ளது.