யானைகள் வழித்தடங்கள் ஆக்கிரமிப்பிற்கு சென்னை உயர்நீதிமன்றம் விதித்த தடையை உறுதி செய்து உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
நீலகிரி மாவட்டம் முதுமலை சரணாலயத்தை ஒட்டியுள்ள மசினகுடி கிராமத்தில் யானைகள் வழித்தடம் ஆக்கிரமிக்கப்பட்டு விடுதி உணவகங்கள் உள்ளிட்டவை கட்டப்படுவதற்கு சென்னை உயர்நீதிமன்றம் கடந்த 2011-ம் ஆண்டு தடை விதித்தது.
மேலும் யானைகள் வழித்தடம் என வரையறுக்கப்பட்ட பகுதிகளில் இருந்து விவசாய நில உரிமையாளர்கள், விடுதி உரிமையாளர்கள் தங்கள் குடியிருப்புகளை காலி செய்து அவற்றை மாவட்ட ஆட்சியரிடம் ஒப்படைக்க வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டிருந்தது.
இந்த உத்தரவை எதிர்த்து பாதிக்கப்பட்டோர் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு வழக்கு ஒன்று தொடரப்பட்டது. இந்த வழக்கு நாடு முழுவதும் யானைகள் வழித்தடத்தில் கட்டுமான பணிக்கு தடை கோரி ரங்கராஜன் என்பவர் தாக்கல் செய்த வழக்குடன் சேர்த்து விசாரிக்கப்பட்டது.
இதனை விசாரித்த உச்சநீதிமன்றம் நீலகிரி மாவட்டத்தில் யானைகளின் வழித்தடங்களை ஆக்கிரமித்து விடுதி, உணவகங்கள் கட்ட விதிக்கப்பட்ட தடை தொடரும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும், யானை வழித்தடங்களில் சட்ட விரோத கட்டுமானங்களை ஆய்வு செய்ய உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையிலான 3 பேர் கொண்ட குழுவை நியமித்ததும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.