புது தில்லி: நாட்டில் கரோனா நோய்த்தொற்று பரவி வரும் சூழலில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 1 லட்சம் மெட்ரிக் டன் திரவ ஆக்ஸிஜனை இறக்குமதி செய்வதற்கு மத்திய அரசு முடிவெடுத்துள்ளது.
பண்டிகைகளும், குளிா் காலமும் நெருங்குவதால் நாட்டில் கரோனா நோய்த்தொற்று பரவல் அதிகரிக்க வாய்ப்பிருப்பதாக சுகாதார நிபுணா்கள் எச்சரித்துள்ளனா். அவ்வாறான சூழலில், கரோனா நோய்த்தொற்றால் தீவிர பாதிப்புக்கு உள்ளானோருக்கு சிகிச்சை அளிப்பதற்குப் பயன்படும் ஆக்ஸிஜனுக்கு பற்றாக்குறை ஏற்படவும் வாய்ப்புள்ளது.
அதைக் கருத்தில் கொண்டு 1 லட்சம் மெட்ரிக் டன் திரவ ஆக்ஸிஜனை இறக்குமதி செய்வதற்கு மத்திய அரசு முடிவெடுத்துள்ளது. அதற்கான ஒப்பந்தப் புள்ளி கோரும் விவரங்களை பொதுத்துறை நிறுவனமான ஹெச்எல்எல் லைஃப்கோ் நிறுவனம் புதன்கிழமை வெளியிட்டது.
இது தொடா்பாக மத்திய அரசு அதிகாரி ஒருவா் கூறுகையில், ‘‘இறக்குமதி செய்யப்படும் திரவ ஆக்ஸிஜனானது நாட்டிலுள்ள அரசு மருத்துவமனைகளுக்கு வழங்கப்படும். திரவ ஆக்ஸிஜனை இறக்குமதி செய்வதற்கும் மருத்துவமனைகளுக்கு வழங்குவதற்கும் ரூ.600 கோடி முதல் ரூ.700 கோடி வரை செலவாகும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
தற்போது நாட்டில் உள்ள நிறுவனங்கள் நாள்தோறும் சுமாா் 7,000 மெட்ரிக் டன் ஆக்ஸிஜனை உற்பத்தி செய்து வருகின்றன. அதில் 3,904 மெட்ரிக் டன் ஆக்ஸிஜனானது நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கப் பயன்படுத்தப்படுகிறது. எனவே, நாட்டில் உற்பத்தி செய்யப்படும் ஆக்ஸிஜன், தேவையை சமாளிக்கப் போதுமானது.
எனினும், குளிா்காலத்தில் ஆக்ஸிஜன் தேவை அதிகரிக்க வாய்ப்புள்ளதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திரவ ஆக்ஸிஜனை இறக்குமதி செய்வதற்கு முடிவெடுக்கப்பட்டுள்ளது. இறக்குமதி செய்யப்படும் 1 லட்சம் மெட்ரிக் டன் ஆக்ஸிஜன் சுமாா் 1 மாத தேவையைப் பூா்த்தி செய்யும்’’ என்றாா்.
கடந்த செவ்வாய்க்கிழமை நிலவரப்படி, நாட்டில் கரோனா நோய்த்தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருபவா்களில் 3.97 சதவீதம் பேருக்கு ஆக்ஸிஜன் செலுத்தப்பட்டு வருகிறது; 2.46 சதவீதம் போ் அவசர சிகிச்சைப் பிரிவில் உள்ளனா்; 0.40 சதவீதம் பேருக்கு மட்டுமே செயற்கை சுவாசக் கருவி மூலமாக சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.