தில்லியில் காற்று மாசு அதிகரித்து வருவதால் பெட்ரோல் மற்றும் டீசல் மூலம் இயங்கும் ஜெனரேட்டர்களைப் பயன்படுத்தத் தடை விதித்து தில்லி மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் உத்தரவிட்டுள்ளது.
தில்லியில் காற்று மாசுபாடை காட்டுப்படுத்த மாநில அரசு சார்பில் பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன. தில்லி நகரில் பல்வேறு இடங்களில் காடுகளை உருவாக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
எனினும் காற்றின் தரம் நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. தில்லியில் ஆ.கே.புரம், ஆனந்த் விஹார், வாசிபூர் ஆகிய பகுதிகளில் காற்றின் தரம் மிகவும் மோசமடைந்துள்ளது.
இதனால் தில்லியில் இன்று (வியாழக்கிழமை) முதல் அவசரத் தேவைகளைத் தவிர பிற பயன்பாட்டுக்கு ஜெனரேட்டர்களைப் பயன்படுத்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
பெட்ரோல் மற்றும் டீசல் மூலம் இயங்கும் ஜெனரேட்டர்களை பயன்படுத்தக் கூடாது என்றும் தில்லி மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது.
காற்றின் தரம் மோசமடைந்துள்ளதால் பெரிய கட்டுமான பணிகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும், தில்லியில் பனிப்பொழிவு ஆரம்பித்துள்ளதால் சாலையோரம் குப்பை மற்றும் மரக்கட்டைகளை எரித்தால் அபராதம் விதிக்கப்படும் என்றும் மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் எச்சரித்துள்ளது.