தில்லியில், சாலை விதிகளை மீறிய காரை நிறுத்த முயன்ற போக்குவரத்துக் காவலரையே, கார் மீது ஏற்றி இழுத்துச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சாலை விதிகளை மீறியபடி வேகமாக வந்து கொண்டிருந்த காரை, அப்பகுதியில் பணியில் இருந்த போக்குவரத்துக் காவலர்கள் தடுத்து நிறுத்த முயன்றார்.
ஆனால், அவரைப் பார்த்தும் காரை நிறுத்தாத வாகன ஓட்டி, காரால் போக்குவரத்துக் காவலரை இடித்ததால் காரின் முன்பகுதியில் போக்குவரத்துக் காவலர் விழுந்துவிட, அப்படியே அவரை தூக்கியவாறு கார் சில மீட்டர்கள் தூரம் வரைச் சென்றது.
பிறகு கார் பிரேக் போட்டபோது, போக்குவரத்துக் காவலர் காரின் பக்கவாட்டில் விழுந்து உயிர் தப்பினார். இவ்வளவையும் தாண்டியும் கூட, அந்த கார் எங்கும் நிற்காமல் வேகமெடுத்துச் சென்றது. அதே சாலையில் சென்று கொண்டிருந்த வாகன ஓட்டிகள் அந்த காரை நிறுத்த முயன்றும், அது நிற்காமல் சென்றது அப்பகுதியில் இருந்த சிசிடிவியில் பதிவாகியுள்ளது.
இந்த சிசிடிவி காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவியதைத் தொடர்ந்து, தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்திய தில்லி காவல்துறை, கார் ஓட்டுநரை கைது செய்துள்ளது.