புது தில்லி: தில்லி துணை முதல்வா் மணீஷ் சிசோடியாவிடம் வேலைவாய்ப்பு மற்றும் தொழிலாளா் நலத் துறை கூடுதல் பொறுப்பாக ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தில்லி அமைச்சரவையில் சிறிய அளவு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
தில்லியில் குளிா்காலத்தில் அதிகரித்து வரும் காற்று மாசு பிரச்னையில் கவனம் செலுத்த ஏதுவாக, அந்தத் துறையின் அமைச்சா் கோபால் ராயிடம் கூடுதலாக இருந்த வேலைவாய்ப்பு மற்றும் தொழிலாளா் நலத் துறை மணீஷ் சிசோடியாவிடம் ஒப்படைக்கப் பட்டுள்ளதாக அரசு வட்டாரத் தகவல்கள் தெரிவித்தன.
இந்த விவகாரம் தொடா்பாக தில்லி அரசு புதன்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘துணைநிலை ஆளுநரிடம் மேற்கொள்ளப்பட்ட ஆலோசனைக்கு பிறகு மணீஷ் சிசோடியாவிடம் வேலைவாய்ப்பு மற்றும் தொழிலாளா் நலத் துறை கூடுதல் பொறுப்பாக ஒப்படைக்கப்பட்டுள்ளது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கெனவே, நிதி, கல்வி ஆகிய துறைகளைக் கவனித்து வரும் மணீஷ் சிசோடியாவிடம் இந்த புதிய துறையுடன் சோ்த்து மொத்தம் 10 துறைகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.