ஹாத்ரஸ்: பாதிக்கப்பட்ட இளம்பெண் வீட்டில் சிபிஐ விசாரணை
ஹாத்ரஸ் கூட்டுப்பாலியல் வன்கொடுமை தொடர்பாக பாதிக்கப்பட்ட இளம்பெண் குடும்பத்தாரிடம் சிபிஐ அதிகாரிகள் இன்று (வியாழக்கிழமை) விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
உத்தரப்பிரதேச மாநிலம் ஹாத்ராஸ் பகுதியில் பட்டியலினத்தைச் சேர்ந்த 19 வயதான இளம்பெண் ஆதிக்க சமூகத்தை சேர்ந்த 4 கும்பலால் கூட்டுப்பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொடூரமான முறையில் கொல்லப்பட்டார்.
இந்த சம்பவம் நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், இது தொடர்பாக சிறப்பு விசாரணைக் குழுவைச் சேர்ந்தவர்கள் விசாரணை நடத்தி வந்தனர்.
இதனிடையே இந்த வழக்கை சிறப்பு புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்ததைத் தொடர்ந்து கடந்த 10-ஆம் தேதி சிபிஐ அதிகாரிகளிடம் இந்த வழக்கு ஒப்படைக்கப்பட்டது.
இதனைத்தொடர்ந்து பாதிக்கப்பட்ட இளம்பெண் குடும்பத்தாரிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.