ஆக்ரா: உத்தரப்பிரதேச மாநிலம் ஹாத்ரஸ் பகுதியைச் சேர்ந்த 19 வயது பெண் கூட்டு பாலியல் பலாத்காரத்துக்கு உள்ளாகி பலியான வழக்கில், முக்கியத் தடயம் அழிந்து போயிருப்பது தெரிய வந்துள்ளது.
செப்டம்பர் 14-ம் தேதி சம்பவம் நடந்த அன்று, பாதிக்கப்பட்ட பெண் முதன் முதலில் மாவட்ட அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சைகள் அளிக்கப்பட்டன. அவர் மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்ட போது, மருத்துவமனையில் பதிவான சிசிடிவி காட்சிகள் முற்றிலும் அழிந்து போயிருப்பது சிபிஐ விசாரணையில் தெரிய வந்துள்ளது.
ஹாத்ரஸ் வழக்கை விசாரித்து வரும் சிபிஐ அதிகாரிகள், மாவட்ட அரசு மருத்துவமனைக்குச் சென்று சிசிடிவி காட்சிகளை கோரியபோதுதான் இந்த தகவல் அவர்களுக்குத் தெரிய வந்துள்ளது.
இது குறித்து மருத்துவமனை தரப்பில் கூறுகையில், சம்பவம் நடந்த போது, மாவட்ட நிர்வாகமோ, காவல்துறையோ சிசிடிவி காட்சிகளைக் கோரவில்லை. ஒரு மாதத்துக்குப் பிறகு வந்து தற்போது சிசிடிவி காட்சிகளைக் கேட்டால் எங்களால் தர இயலாது, யாராவது சிசிடிவி பதிவுகளைக் கேட்டால் மட்டுமே அதனை பதிவு செய்து வழங்க முடியும். இல்லையேல், ஏழு நாள்களுக்குப் பிறகு ஒவ்வொரு நாளாக பதிவுகள் அழிந்து, அதில்தான் அடுத்த நாளுக்கான காட்சிகள் பதிவு செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மருத்துவமனைக்கு வந்து விசாரணை நடத்திய சிபிஐ அதிகாரிகள், அப்பெண்ணுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் மற்றும் அவரை பரிசோதித்தவர்களின் வாக்குமூலங்களை பதிவு செய்து கொண்டனர். ஆனால், முதல் நாளைய சிசிடிவி பதிவு என்பது மிக மிக முக்கியத்துவம் பெற்றது என்று காவல்துறை அதிகாரி கூறுகிறார்.