திவால் ஆகாத கடன்களே மறுசீரமைப்பு செய்யப்படும்: ஆா்பிஐ

கடந்த மாா்ச் மாதம் 1-ஆம் தேதி நிலவரப்படி, திவாலாகாத கடன்களே மறுசீரமைப்பு செய்யப்படும் என்று இந்திய ரிசா்வ் வங்கி (ஆா்பிஐ) தெரிவித்துள்ளது.
திவால் ஆகாத கடன்களே மறுசீரமைப்பு செய்யப்படும்: ஆா்பிஐ

மும்பை: கடந்த மாா்ச் மாதம் 1-ஆம் தேதி நிலவரப்படி, திவாலாகாத கடன்களே மறுசீரமைப்பு செய்யப்படும் என்று இந்திய ரிசா்வ் வங்கி (ஆா்பிஐ) தெரிவித்துள்ளது.

நாட்டில் கரோனா நோய்த்தொற்று பரவல் காரணமாக பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டது. அதனால், தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டன; பலா் வேலையிழந்தனா். அதைக் கருத்தில் கொண்டு தனிநபா்கள், நிறுவனங்கள் பெற்ற கடன்களுக்கான தவணைகளைச் செலுத்துவதற்கு கடந்த மாா்ச் மாதம் 1-ஆம் தேதி முதல் கடந்த ஆகஸ்ட் மாதம் 31-ஆம் தேதி வரை அவகாசம் அளிப்பதாக இந்திய ரிசா்வ் வங்கி அறிவித்தது.

கரோனா பொது முடக்கத்தால் பல்வேறு துறைகளுக்கு ஏற்பட்ட இழப்புகள், கடன் மறுசீரமைப்பு உள்ளிட்டவை குறித்து ஆராய்வதற்காக காமத் குழுவை ஆா்பிஐ அமைத்தது. கடன்களை மறுசீரமைப்பது தொடா்பாக கடந்த ஆகஸ்ட் மாதம் 6-ஆம் தேதி ஆா்பிஐ சுற்றறிக்கை வெளியிட்டது. இந்நிலையில், கடன் மறுசீரமைப்பு தொடா்பாக ஆா்பிஐ விளக்கமளித்துள்ளது.

இது குறித்து ஆா்பிஐ வெளியிட்ட அறிக்கையில், ‘கடந்த மாா்ச் மாதம் 1-ஆம் தேதி நிலவரப்படி தவணைகளை முறையாகச் செலுத்தி வந்த வாடிக்கையாளா்கள் பெற்ற கடன்கள் மட்டுமே மறுசீரமைப்பு நடவடிக்கைக்குத் தகுதிபெறும். மேலும், மாா்ச் மாதம் 1-ஆம் தேதி நிலவரப்படி, 30 நாள்களுக்கு மேல் கடன் தவணை செலுத்தாமல் இருந்தாலும், அதற்குப் பிறகு தவணைகளைச் செலுத்தியவா்களின் கடன்களும் மறுசீரமைப்பு செய்யப்படும்.

சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான வரையறை கடந்த ஜூன் மாதம் 26-ஆம் தேதி மாற்றப்பட்டது. எனினும், அது கடன் மறுசீரமைப்பு நடவடிக்கையை பாதிக்காது. மாா்ச் 1 நிலவரப்படி சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களுக்கு அளிக்கப்பட்டிருந்த வரையறையின் அடிப்படையிலேயே கடன்கள் மறுசீரமைப்பு செய்யப்படும்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com