பிகார் சட்டப்பேரவைத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து 12 கூட்டங்களில் பிரதமர் மோடி கலந்து கொள்ள உள்ளதாக பாஜக பிகார் தேர்தல் பொறுப்பாளர் தேவேந்திர பட்னாவிஸ் தெரிவித்துள்ளார்.
பிகார் சட்டப்பேரவைத் தேர்தல் அக்டோபர் 28-ம் தேதி தொடங்கி 3 கட்டங்களாக நடைபெறுகிறது. ராஷ்ட்ரிய ஜனதா தளம் தலைமையிலான மெகா கூட்டணியில் காங்கிரஸும், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாஜகவும் போட்டியிடுகின்றன.
இந்நிலையில் அக்டோபர் 23 முதல் மாநிலம் முழுவதும் பல்வேறு இடங்களில் நடைபெற உள்ள தேர்தல் பரப்புரை கூட்டங்களில் மோடி கலந்து கொள்வார் என பாஜகவின் பிகார் தேர்தல் பொறுப்பாளரும், மகாராஷ்டிரத்தின் முன்னாள் முதல்வருமான தேவேந்திர பட்னாவிஸ் தெரிவித்துள்ளார்.
தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து அக்டோபர் 23ல் சசாரம், கயா மற்றும் பாகல்பூரில் நடைபெறும் கூட்டங்களில் கலந்து கொள்ளும் மோடி அதனைத் தொடர்ந்து அக்டோபர் 28ஆம் தேதி தர்பங்கா, முசாபர்பூர் மற்றும் பாட்னாவில் நடைபெறும் கூட்டங்களிலும், நவம்பர் 3 ஆம் தேதி மேற்கு சம்பாரன், சஹர்சா மற்றும் அரேரியாவில் நடைபெறும் பிரசாரக் கூட்டங்களிலும் பங்கேற்க உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
243 உறுப்பினர்களைக் கொண்ட சட்டப்பேரவைத் தொகுதிகளில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாஜக 121 தொகுதிகளில் போட்டியிடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.