உத்தரப்பிரதேசத்தில் மேலும் ஒரு பட்டியலினப் பெண் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கழுத்தை நெறித்து கொல்லப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஹாத்ரஸ் கூட்டுப்பாலியல் வன்கொடுமை சம்பவத்திற்கு பிறகு அதேபோன்று வயலுக்குச் சென்ற இளம்பெண் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.
உத்தரப்பிரதேச மாநிலம் பராபங்கி பகுதியில் வயல்வெளிக்குச் சென்ற பட்டியலினத்தைச் சேர்ந்த 18 வயது இளம் பெண் இறந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இது குறித்து குடும்பத்தினர் அளித்த புகாரின் பேரில் நிகழ்விடத்திற்கு சென்று காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். மேலும் இளம்பெண்ணின் உடலை உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பிவைத்தனர்.
இதில் இளம்பெண் கழுத்தை நெறித்து கொல்லப்பட்டுள்ளதாகவும், கொல்லப்படுவதற்கு முன்பு பாலியல் துன்புறுத்தல் அளிக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
இதனையடுத்து சந்தேகத்தின்பேரில் காவல்துறையினர் ஒருவரைப் பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஹாத்ரஸ் பகுதியில் 19 வயது இளம்பெண் ஆதிக்க சமூகத்தினரால் கூட்டுப்பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொடூரமான முறையில் கொல்லப்பட்ட நிலையில், தற்போது அதேபோன்று மேலும் ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது குறிப்பிடத்தக்கது.