புது தில்லி: கள்ளக்குறிச்சி திமுக எம்.பி. கௌதம சிகாமணியின் ரூ.8.6 கோடி மதிப்புள்ள சொத்துகளை முடக்கி அமலாக்கத் துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
ரிசர்வ் வங்கியின் ஒப்புதலின்றி வெளிநாடுகளில் முதலீடு செய்து வருவாய் ஈட்டியதாகத் தொடரப்பட்ட வழக்கில், அன்னிய செலாவணி சட்டத்தின் கீழ் சொத்துகளை முடக்கியுள்ளது அமலாக்கத் துறை.
வெளிநாடுகளில் செய்த முதலீட்டின் மூலம் கிடைத்த வருவாய் ரூ.7.05 கோடியை மறைத்ததாகவும் திமுக முன்னாள் அமைச்சர் பொன்முடி மகன் கௌதம சிகாமணி அமலாக்கத் துறை விசாரணையில் தெரிய வந்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
இதன் அடிப்படையில் கௌதம சிகாமணிக்கு சொந்தமாக தமிழகத்தில் உள்ள அசையாத சொத்துக்களான வேளாண் நிலங்கள், வணிக மற்றும் குடியிருப்புக் கட்டடங்கள் மற்றும் அசையும் சொத்துக்களான வங்கிக் கணக்கில் இருக்கும் பணம் உள்பட ரூ.8.6 கோடி மதிப்பிலான சொத்துகள், அன்னிய செலாவணி சட்டத்தின் கீழ் முடக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.