சண்டிகர்: ஹரியாணா மாநிலம் பானிபட் மாவட்டத்தில், தனது கணவரால் சொல்லொணாத் துயரங்களுக்கு உள்ளாகி, ஓராண்டுக்கும் மேலாக கழிப்பறையில் வைத்துப் பூட்டி வைக்கப்பட்ட பெண்ணை காவல்துறையினர் மீட்டுள்ளனர்.
தங்களுக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் ரிஷிபுர் கிராமத்தில் ஒரு பெண்ணை மீட்டிருப்பதாக பெண்கள் பாதுகாப்பு மற்றும் குழந்தைத் திருமண தடுப்பு அதிகாரி ரஜினி குப்தா கூறியுள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், ஓராண்டு காலத்துக்கும் மேலாக ஒரு பெண் கழிப்பறையில் வைத்து பூட்டப்பட்டிருப்பதாக எங்களுக்குத் தகவல் கிடைக்கப்பெற்றது. எனது குழுவினருடன் நான் அங்குச் சென்றேன். அப்போது அங்கு நாங்கள் மீட்ட பெண் பல நாள்களாக எதுவும் சாப்பிடாமல் இருந்ததும் தெரிய வந்தது. அவர் மனநிலை பாதிக்கப்பட்டவர் என்று கூறினார்கள். ஆனால் அது உண்மையில்லை என்றும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்று கூறினார்.
அவர் கழிப்பறையில் இருந்து மீட்கப்பட்டுள்ளார். அவரது குடும்பத்தினர் அனைவரையும் அவர் சரியாகவே அடையாளம் காட்டினார். நாங்கள் கேட்கும் கேள்விகளுக்கும் அவர் பதிலளித்துள்ளார். அவருக்கு மனநிலை சரியில்லை என்றால், சிகிச்சை எடுத்து வருவதற்கான ஆதாரங்கள் எதையும் அவரது கணவரால் காட்ட இயலவில்லை என்று தெரிவித்தார்.
ஆனால் அவரது கணவர் கூறுகையில், வெளியே இரு என்று நாங்கள் சொன்னால் அவர் கேட்க மாட்டார். நாங்கள் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றும் அவரிடம் எந்த முன்னேற்றமும் இல்லை என்று கூறுகிறார்.
17 ஆண்டுகளுக்கு முன்பு அவர்களுக்கு திருமணம் நடந்துள்ளது, 3 பிள்ளைகளும் உள்ளனர். விசாரணைக்குப் பிறகே உண்மை நிலவரம் தெரிய வரும். மருத்துவர்களின் ஆலோசனையைப் பெறவும் திட்டமிட்டுள்ளோம் என்று காவல்துறை அதிகாரிகள் கூறுகிறார்கள்.
தங்களது தாயை பிள்ளைகள் நடத்தும் விதமும் சரியாகத் தெரியவில்லை. எனவே, அவர்களிடமும் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளோம் என்று காவல்துறையினர் கூறுகிறார்கள்.