பிகார் முதல்வர் நிதிஷ் குமார் கொள்கை, விதி மற்றும் ஒழுக்கம் என எதையுமே கடைப்பிடிப்பதில்லை என்று முன்னாள் முதல்வரும் ராஷ்டிரிய ஜனதா தளக் கட்சியின் தலைவருமான லாலு பிரசாத் யாதவ் தெரிவித்துள்ளார்.
பிகாரில் வரும் வரும் 28-ஆம் தேதி மற்றும் நவம்பர் 3, 7 ஆகிய தேதிகளில் மூன்று கட்டங்களாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது.
இதில் ராஷ்டிரிய ஜனதா தளக் கூட்டணியில் காங்கிரஸ் கட்சியும், ஐக்கிய ஜனதா தளக் கூட்டணியில் பாஜகவும் போட்டியிடுகிறது.
இதனிடையே கால்நடைத்தீவன ஊழல் வழக்கிலிருந்து ஜாமினில் வெளிவந்துள்ள லாலு பிரசாத் யாதவ், பிகார் தேர்தலையொட்டி சுட்டுரையில் விடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார்.
அதில், ''நாற்காலியின் மீது பேராசைக் கொண்டு பிகார் மாநிலத்தை பெரும் சிக்கலில் சிக்க வைத்துள்ளார். 2010-ஆம் ஆண்டு தேர்தலில் பெரும்பான்மையாக வெற்றி பெற்று கூட்டணிக் கட்சியினருக்கு துரோகம் இழைத்தார். 2015-ஆம் ஆண்டு தேர்தலில் முதுகில் குத்தி ஆட்சியைப் பிடித்தார்'' என்று விமர்சித்துள்ளார்.
மேலும், ''நாற்காலியின் மீதான பேராசையில் 15 ஆண்டுகாலம் சென்றுவிட்டது. இதில் குழந்தைகளுக்கான கல்வி, மருத்துவ சேவை, இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு, குடும்பநலன் உள்ளிட்ட அனைத்தும் கைவிடப்பட்டுள்ளது'' என்று சுட்டுரையில் பதிவிட்டுள்ளார்.