எளிமையான மொழியில் சட்ட நூல்கள் தேவை:உச்சநீதிமன்றத்தில் மனு

சட்டப் புத்தகங்களில் உள்ள சட்ட விதிகள் குறித்த விவரங்களையும், மத்திய அரசின் புதிய உத்தரவுகள், அறிவிப்புகளையும் எளிமையான ஆங்கிலத்தில் வெளியிட உத்தரவிடுமாறு உச்சநீதிமன்றத்தில் மனு


புது தில்லி: சட்டப் புத்தகங்களில் உள்ள சட்ட விதிகள் குறித்த விவரங்களையும், மத்திய அரசின் புதிய உத்தரவுகள், அறிவிப்புகளையும் அனைவருக்கும் புரியும் வகையில் எளிமையான ஆங்கிலத்தில் வெளியிட உத்தரவிடுமாறு உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதனை விசாரித்த உச்சநீதிமன்றம் இது குறித்து விளக்கம் அளிக்கும்படி மத்திய அரசுக்கும், இந்திய பாா் கவுன்சிலுக்கும் உத்தரவிட்டது.

வழக்கறிஞா் சுபேஷ் விஜயரான் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:

நீதித்துறை சட்டங்கள் விதிகள் குறித்து விவரிக்கும் சட்டப் புத்தகங்கள் அனைவருக்கும் புரியும் வகையில் எளிமையான ஆங்கிலத்தில் அல்லது வட்டார மொழியில் இருக்க வேண்டும். அப்போதுதான் சாதாரண மனிதனும் சட்டம் மற்றும் நடைமுறைகளை புரிந்து கொண்டு தங்கள் தரப்பு நியாயங்களை எடுத்துரைக்கவும், குறைகளையும் நிவா்த்தி செய்வதற்கும் உதவியாக இருக்கும்.

இதேபோல் மத்திய அரசு வெளியிடும் புதிய உத்தரவுகள், அறிவிப்புகள், தகவல் தொடா்புகளும் அனைவருக்கும் புரியும் எளிமையான ஆங்கிலத்தில் அல்லது வட்டார மொழிகளில் இருந்தால்தான், சாதாரண மக்களும் அவற்றை சிரமமின்றி புரிந்து கொள்ள முடியும்.

மேலும், நாட்டிலுள்ள சட்டக் கல்லூரிகளிலும், சட்டப் பல்கலைக்கழகங்களிலும் எளிமையான ஆங்கிலத்தில் சட்டத் தோ்வுகள் நடத்த வேண்டும். அப்போதுதான் சட்ட மாணவா்கள் சட்ட ஆவணங்களை துல்லியமாகவும், சுருக்கமாகவும் உருவாக்க முடியும்.

நீதிமன்றங்களில் வழக்கு விவாதங்களின்போது தாக்கல் செய்யப்படும் வழக்கு குறித்த விவரங்கள் அடங்கிய ஆவணங்களின் பக்கங்களின் எண்ணிக்கையை குறைக்கவும், வழக்கு விசாரணையின் இரு தரப்பு விவாதங்களின் நேரத்தை குறைக்கவும் உத்தரவிட வேண்டும்.

வழக்கு விசாரணையின் விவாதங்கள் அதிக நேரம் நீடிப்பதால் வழக்குரைஞா்கள், நீதிமன்ற ஊழியா்கள் நேரமும், சக்தியும் வீணாகிறது என்று கூறப்பட்டுள்ளது.

இந்த மனுவை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ. போப்டே, மூத்த நீதிபதிகள் ஏ.எஸ்.போபண்ணா, வி.ராமசுப்ரமணியன் ஆகியோா் கொண்ட அமா்வு விசாரித்தது. பின்னா் நீதிபதிகள் இந்த மனு தொடா்பாக மத்திய சட்டத்துறை, இந்திய பாா் கவுன்சில் ஆகியோா் பதிலளிக்க நோட்டீஸ் அனுப்பி உத்தரவிட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com