மகாராஷ்டிரத்தில் பெய்த தொடர் கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கால் பயிர்கள் சேதமடைந்த மற்றும் வாழ்வாதாரத்தை இழந்த விவசாயிகளுக்கு மத்திய அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என்று மகாராஷ்டிர அரசு கோரிக்கை வைத்துள்ளது.
மகாராஷ்டிரத்தில் கடந்த நான்கு நாள்களாக தொடர் மழை பெய்து வருகிறது. மேலும் கடந்த 2 நாள்களாக பெய்த கனமழையின் காரணமாக பல்வேறு இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
கனமழையால் நிரம்பிய அணைகள் திறந்துவிடப்பட்டுள்ளதால், பல்வேறு கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. அதிகபட்சமாக மேற்கு மகாராஷ்டிரத்தின் புணே, சோலாப்பூர், சாங்லி மற்றும் சதாரா ஆகிய பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
இது குறித்து பேசிய மகாராஷ்டிர மாநில நிவாரண மற்றும் மறுவாழ்வு அமைச்சர் விஜய் வதேட்டிவார், ''அக்டோபர் 14 மற்றும் 15 ஆகிய தேதிகளில் பெய்த கனமழையால் பல்வேறு பகுதிகளில் விளை நிலங்கள் நீரில் மூழ்கியுள்ளன. இதனால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கக்கோரி மத்திய அரசிடம் முறையிட உள்ளேன். இதற்காக சேத மதிப்புகள் குறித்த அறிக்கை தயாராகி வருகிறது. விவசாயத்துறை சேத மதிப்புகள் குறித்து விரைந்து அறிக்கை தயாரிக்க வேண்டும் என்று அதிகாரிகளை கேட்டுக்கொள்கிறேன்.
இதுவரை 28 பேர் கனமழை வெள்ளத்திற்கு பலியாகியுள்ளனர். 2,319 வீடுகள் சேதமடைந்துள்ளன. முதன்மை அறிக்கையின்படி 57,354 ஹெக்டர் விவசாய நிலங்கள் சேதமடைந்துள்ளன'' என்று அமைச்சர் தெரிவித்தார்.