விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை உறுதி செய்யும் வகையில் விவசாயப் பயிர்கள் கொள்முதல் செய்யப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். நாட்டின் உணவுப் பாதுகாப்பில் இது மிகவும் முக்கியமானது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
விவசாயப் பயிர்களைக் குறைந்தபட்ச ஆதார விலையில் வாங்குதல் அறிவியல் முறையில் தொடரும் வகையில் மண்டி உள்கட்டமைப்பை மேம்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
உணவு மற்றும் விவசாய அமைப்பின் 75-வது ஆண்டுவிழாவையொட்டி 75 ரூபாய் நினைவு நாணயத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று (வெள்ளிக்கிழமை) வெளியிட்டார்.
இதனைத்தொடர்ந்து பேசிய பிரதமர் மோடி, ''குறைந்தபட்ச ஆதார விலையில் விவசாயப் பயிர்களை கொள்முதல் செய்வது உணவுப் பாதுகாப்பின் முக்கிய அம்சம். மேலும், குறைந்தபட்ச ஆதார விலையில் கொள்முதல் செய்வது சிறந்த வசதிகளுடன் விஞ்ஞான வழியில் தொடர்ந்து செயல்படுவது அவசியம்'' என்று தெரிவித்தார்.
''வேளாண்மை உற்பத்தி சந்தைப்படுத்தல் குழுக்களின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் வகையில் கடந்த ஆறு ஆண்டுகளாக அரசு சார்பில் முதலீடு செய்து ஊக்குவிக்கப்பட்டு வருகிறது'' என்று பிரதமர் கூறினார்.