பிகார் சட்டப்பேரவைத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரத்தில் ஈடுபடும் பாஜக தலைவர்கள் பட்டியலை அக்கட்சி சனிக்கிழமை வெளியிட்டுள்ளது.
பிகார் சட்டப்பேரவைத் தேர்தல் அக்டோபர் 28-ம் தேதி தொடங்கி 3 கட்டங்களாக நடைபெறுகிறது. ராஷ்ட்ரிய ஜனதா தளம் தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸும், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாஜகவும் போட்டியிடுகின்றன.
இந்நிலையில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரத்தில் ஈடுபட உள்ள பாஜக தேசியத் தலைவர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி பிரதமர் நரேந்திரமோடி, பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா, மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், அமித்ஷா, நிதின்கட்கரி, மனோஜ் திவாரி, ஸ்மிருதிராணி, உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்ட 30 பேர் கொண்ட பட்டியல் வெளியாகியுள்ளது.
முன்னதாக அக்டோபர் 23 முதல் மாநிலம் முழுவதும் பல்வேறு இடங்களில் நடைபெற உள்ள தேர்தல் பரப்புரை கூட்டங்களில் மோடி கலந்து கொள்வார் என பாஜகவின் பிகார் தேர்தல் பொறுப்பாளரும், மகாராஷ்டிரத்தின் முன்னாள் முதல்வருமான தேவேந்திர பட்னாவிஸ் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.