பஞ்சாபில் பாஜக தலைவருக்கு எதிரான போராட்டத்தில் இளைஞர் காங்கிரஸ் கட்சியினருக்கும் காவல்துறையினருக்கும் இடையே ஏற்பட்ட மோதலால் பரபரப்பு நிலவியது.
மத்திய அரசால் கொண்டுவரப்பட்ட வேளாண் விளைபொருள் வர்த்தக மசோதா, விவசாயிகளின் விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்க உத்தரவாதம் அளிக்கும் மசோதா, அத்தியாவசியப் பொருட்கள் திருத்த மசோதா ஆகிய 3 மசோதாக்களுக்கும் சட்டமாக நிறைவேற்றப்பட்டன.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பஞ்சாப், ஹரியாணா, உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
சமீபத்தில் விவசாயிகளின் குறைகளை ஆராய்வதற்காகவும், அது குறித்து விவாதிப்பதற்காகவும் விவசாய அமைப்புகள் சார்பில் சிறப்புக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்ட நிலையில், அதில் பாஜக தலைவர்கள் உள்பட அமைச்சர்கள் பலர் கலந்துகொள்ளாமல் புறக்கணித்தனர்.
அதனைக் கண்டித்து ஆலோசனைக் கூட்டத்தின்போதே விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், இன்று (சனிக்கிழமை) பஞ்சாப் மாநில பா.ஜ.க. தலைவர் அஷ்வினி சர்மா வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஜம்ஹூரி கிசான் சபா மற்றும் பாரதிய கிசான் யூனியன் ஆகிய அமைப்பை சேர்ந்த விவசாயிகள் கைகளில் கொடி மற்றும் பதாகைகளை ஏந்தி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அசம்பாவிதங்கள் நடைபெறுவதை தவிர்க்கும் வகையில் அப்பகுதியில் காவல்துறையினர் குவிக்கப்பட்டு தடுப்புகள் அமைத்து போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளைக் கட்டுப்படுத்த முயன்றனர்.
அப்போது விவசாயிகளுடன் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த இளைஞர் காங்கிரஸாருக்கும், காவல்துறையினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. காவல்துறையினர் அவர்களைத் தடுக்க முயன்றனர். ஆனால் சாலையை நோக்கி இளைஞர்கள் முன்னேறியதால், காவல்துறையினர் அவர்களை கைது செய்து அழைத்துச் சென்றனர்.