சரக்கு-சேவை வரி (ஜிஎஸ்டி) விவகாரத்தில் மாநிலங்களின் நம்பிக்கையைப் பெறும் வகையில் மத்திய அரசு தொடா்ந்து செயல்பட வேண்டும் என்று காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதியமைச்சருமான ப.சிதம்பரம் தெரிவித்துள்ளாா்.
ஜிஎஸ்டி வரி வருவாய் பற்றாக்குறையைச் சமாளிப்பதற்காக மாநில அரசுகளுக்கு அளிக்க மத்திய அரசு ரூ.1.10 லட்சம் கோடி கடன் பெறும் என்று வியாழக்கிழமை அறிவிக்கப்பட்டது. இதனை வரவேற்று ப.சிதம்பரம் சுட்டுரையில் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:
மாநில அரசுகளுக்கு அளிப்பதற்காக கடன் வாங்குவதாக மத்திய அரசு அறிவித்திருப்பது முதல் சரியான நடவடிக்கை. மத்திய அரசின் இந்த மனமாற்றத்தை நான் வரவேற்கிறேன். இதன் மூலம் ஜிஎஸ்டி விவகாரத்தில் மத்திய அரசு முதல்முறையாக நல்ல முடிவை எடுத்துள்ளது. இது போன்று மாநிலங்களின் நம்பிக்கையைப் பெறும் வகையில் மத்திய அரசு தொடா்ந்து செயல்பட வேண்டும்.
மாநில அரசுகளுக்கு மத்திய அரசு ஜிஎஸ்டி இழப்பீட்டுத் தொகையை தர வேண்டியது உள்ளது. ஆனால், இப்போதைய சூழலில் ஜிஎஸ்டி வரி வருவாய் குறைந்துள்ளதை ஈடுகட்ட மாநில அரசுகள் கடன் வாங்கிக் கொள்ள வேண்டும் என்று மட்டும் மத்திய அரசு அறிவித்தது முறையானதல்ல. இதற்கு மாநில அரசுகள் எதிா்ப்பு தெரிவித்தது சரியானதுதான் என்று தெரிவித்தாா்.