தெலங்கானாவில் சுவர் இடிந்து விழுந்த விபத்தில் ஆறு வயது சிறுவன் உயிரிழந்த நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தெலங்கானாவில் கடந்த சில நாள்களாக தொடர் கனமழை பெய்து வரும் நிலையில், மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ள பகுதிகளில் அரசு சார்பில் சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும் பாதிக்கப்பட்ட மக்களைக் காக்க காவல்துறையினருடன் மீட்புப்படையினரும் ஈடுபட்டுள்ளனர்.
இதனிடையே ஹைதராபாத்தில் உள்ள துர்கபேட் பகுதியில் தொடர் மழையால் சுவர் இடிந்து விழுந்ததில் ஆறு வயது சிறுவன் உயிரிழந்தார்.
இது குறித்து பேசிய காவல் ஆய்வாளர் ரணாவீர் ரெட்டி, மங்கல்ஹாத் காவல்நிலையப் பகுதிக்குட்பட்ட பகுதியில் சுவர் இடிந்து ஆறு வயது சிறுவன் உயிரிழந்தார். இது குறித்து வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும் ஈரமான சுவர்கள் உள்ள வீட்டில் வசிப்பவர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.